பழைய நகையை அதிக விலைக்கு விற்று தருவதாக கூறி வியாபாரியிடம் 1 கிலோ தங்க நகை மோசடி; வாலிபர் கைது


பழைய நகையை அதிக விலைக்கு விற்று தருவதாக கூறி வியாபாரியிடம் 1 கிலோ தங்க நகை மோசடி; வாலிபர் கைது
x

பிராட்வேயில் பழைய நகையை அதிக விலைக்கு விற்று தருவதாக கூறி நகை வியாபாரியிடம் 1 கிலோ தங்க நகை மோசடி செய்த வாலிபர் கைதானார்.

சென்னை

சென்னை பிராட்வே ஆச்சாரப்பன் தெருவை சேர்ந்தவர் பெரோஸ் (வயது 40). இவர் இதே பகுதியில் நகை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், இவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழக்கரையைச் சேர்ந்த சதாம் உசேன் (30), மற்றும் அவரது நண்பர் ஷாஜகான் ஆகிய 2 பேர் அறிமுகமாகி உள்ளனர். அப்போது அவர்கள் சென்னை வேளச்சேரியில் தங்கி இருக்கும் தாங்கள் நகை வியாபாரம் செய்து வருவதாகவும், பழைய நகையை வாங்கி அதிக விலைக்கு விற்று தருவதாகவும் கூறி உள்ளனர்.

இதனால் ஏற்பட்ட பேராசையில் அவர்கள் கூறியதை உண்மையென நம்பிய பெரோஸ் அவர் கடையில் இருந்த சுமார் 1 கிலோ பழைய நகையை தங்கமாக உருக்கி இருவரிடம் கொடுத்துள்ளார்.

இதைப் பெற்றுக் கொண்ட சதாம் உசேன் மற்றும் ஷாஜகான் ஆகிய 2 பேரும் என்.எஸ்.சி போஸ் ரோட்டில் உள்ள ஒரு கடையில் மதிப்பீடு செய்ய வேண்டும் என கூறி தங்கத்துடன் தப்பி சென்றனர்.

இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த பெரோஸ் இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட தலைமறைவாக இருந்த சதாம் உசேனை நேற்று கைது செய்தனர். இவரது கூட்டாளியான ஷாஜகானை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையடுத்து பிடிபட்ட சதாம் உசேன் வீட்டிலிருந்து ரூ.20 லட்சம் மற்றும் 4 பவுன் தங்க நகையையும் போலீசார் கைப்பற்றினர்.


Next Story