நூதன முறையில் தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.2 லட்சம் மோசடி
நூதன முறையில் தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.2 லட்சத்தை மோசடி செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தனியார் நிறுவன மேலாளர்
விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 35), தனியார் நிறுவன மேலாளரான இவர், தனக்கு ஏ4 ரிம் தேவை என இந்தியா மார்ட் இணையதளத்தில் பதிவு செய்தார்.
அதன் பிறகு சில நாட்கள் கழித்து கிருஷ்ணகுமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர், தான் அசாம் மாநிலம் தாஜ் பேப்பர்ஸ் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி தனது கடை முகவரி, ஜி.எஸ்.டி., இணையதளம் ஆகிய விவரங்களை கிருஷ்ணகுமாரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பினார்.
பின்னர் கிருஷ்ணகுமார், அந்த நபரிடம் ஏ4 (பி2பி), ஏ3, லீகல்ஷீட், பாண்ட்ஷீட் ஆகியவற்றை மொத்த விற்பனையில் 2 ஆயிரம் ரிம்களை பெற பேரம் பேசியுள்ளார்.
அதன் பின்னர், அந்த நபர் கூறிய கணக்கிற்கு தனது ஜிபே மூலம் ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 250-ஐ 4 தவணைகளாக கிருஷ்ணகுமார் அனுப்பியுள்ளார்.
ரூ.2 லட்சம் மோசடி
ஆனால் பணத்தை பெற்ற மர்ம நபர், கிருஷ்ணகுமாருக்கு அனுப்ப வேண்டிய மேற்கண்ட பொருட்களை அனுப்பி வைக்காமலும், பணத்தை திருப்பித்தராமலும் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். பலமுறை முயற்சி செய்தும் அந்த நபரை கிருஷ்ணகுமாரால் தொடர்புகொள்ள முடியவில்லை.
இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.