காஞ்சீபுரத்தில் மத்திய அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி - கலெக்டர் தகவல்


காஞ்சீபுரத்தில் மத்திய அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி - கலெக்டர் தகவல்
x

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே மற்றும் வங்கிப் பணியாளர் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

இலவச பயிற்சி வகுப்புகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் மத்திய அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளாகிய பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வு குழுமம் , வங்கிப்பணியாளர் தேர்வுக்குழுமம் உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றி பெற தேவையான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட மத்திய அரசின் போட்டித்தேர்வுகளை தமிழகத்தைச்சேர்ந்த போட்டித்தேர்வர்கள் பெருமளவில் பங்குகொண்டு வெற்றி பெறும் நோக்கில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட்டு 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது.

முன்பதிவு

இப்பயிற்சியானது மேற்கண்ட தேர்வர்களுக்கு சிறந்த முறையில் வழங்க இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுநர்களைக்கொண்டு பயிற்சி சிறப்பாக வழங்கப்பட உள்ளது. எனவே, இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது அலுவலகத் தொலைபேசி எண் 044-27237124 வாயிலாக தொடர்பு கொண்டு தங்கள் பெயரினை முன்பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்பயிற்சி வகுப்புகளில் அரசுப்பணிக்கு தயாராகிவரும் காஞ்சீபுரம் மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story