அடிக்கடி தூக்குப்போடுவது போன்று கனவு: மனமுடைந்த பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


அடிக்கடி தூக்குப்போடுவது போன்று கனவு: மனமுடைந்த பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

பிளஸ்-2 மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னை மயிலாப்பூர், முத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. இவர், தனது வீட்டில் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக வகுப்பு நடத்தி வருகிறார். நாகலட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் சுரேஷ்குமாரை கடந்த 10 வருடங்களுக்கு முன் பிரிந்துள்ளார். அதன்பின் தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் ஜனனி (வயது 17), மயிலாப்பூரில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். ஜனனி நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜனனியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மாணவியின் அறையை சோதனை செய்த போது, ஜனனி எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர், "இரவில் தூங்கும் போது அடிக்கடி தூக்குப்போடுவது போன்ற கனவு வருகிறது. இதனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, 3 படத்தை போல நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன். அம்மா, அண்ணன் மற்றும் நண்பர்களை பிரிவது மிகவும் வருத்தமாக உள்ளது" என எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

எனினும் மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


Next Story