முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 4-வது நாளாக கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு


முல்லைப்பெரியாறு அணையில் இருந்து   4-வது நாளாக கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு
x

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 4-வது நாளாக கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

தேனி

முல்லைப்பெரியாறு அணை

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 142 அடி வரை நீரை தேக்கிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

இந்த அணையில் பருவகாலத்துக்கு ஏற்ப நீர் மட்ட உயர்வை நிர்ணயிக்கும் ரூல்கர்வ் விதி கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இந்த விதிப்படி அட்டவணை தயாரிக்கப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.அதன்படி ஆகஸ்டு 10-ந்தேதி வரை அணையில் 137.5 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம் என்று அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு

இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக கேரளாவுக்கு உபரிநீர் திறந்துவிடப்பட்டு வருகிறது தொடர்ந்து நீர்வரத்து அதிகாித்து வருவதால் அணையில் இருந்து மொத்தம் 10 மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று கேரளாவுக்கு வினாடிக்கு 3,166 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் 4-வது நாளாக இன்று அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மாலை 5 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.90 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 9802 கனஅடியாக இருந்தது. தமிழக பகுதிக்கு வினாடிக்கு 2,122 கன அடியும், கேரளாவுக்கு வினாடிக்கு 6,300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.


Next Story