கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 10 July 2023 8:30 PM GMT (Updated: 11 July 2023 11:28 AM GMT)

கொத்தனார் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தஞ்சாவூர்

கொத்தனார் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கொத்தனார் கொலை

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த நரசிங்கம்பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் தனபால் (வயது 32). கொத்தனார். சம்பவத்தன்று இவர் நரசிங்கம்பேட்டை கடைத்தெரு பகுதியில் தனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேர் தனபாலை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தனபாலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை தொடர்பாக திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்பகோணம் தாலுகா காரைக்கால் ரோடு முத்துப்பிள்ளை மண்டபம் பாரதிநகர் வடக்கு பகுதியை சேர்ந்த ராவணன் மகன் சரண்ராஜ் (22), திருவிடைமருதூர் தாலுகா நரசிங்கன்பேட்டை தியாகராஜபுரம் வடக்குதெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் சுந்தர் (29), கும்பகோணம் தாலுகா முத்துபிள்ளை மண்டபம் தெற்கு தெரு பாரதிநகரை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் அழகர்சாமி (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

இந்தநிலையில் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் பரிந்துரையின்பேரில் திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார்.

இந்த ஆவணங்களை கலெக்டர் தீபக் ஜேக்கப் பரிசீலனை செய்து சரண்ராஜ், சுந்தர், அழகர்சாமி ஆகிய 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான ஆவணங்களை மத்திய சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் சமர்ப்பித்தனர்.


Next Story