கியாஸ் கசிந்து தீ விபத்து; குழந்தை சாவு - பாட்டி, தங்கை படுகாயம்


கியாஸ் கசிந்து தீ விபத்து; குழந்தை சாவு - பாட்டி, தங்கை படுகாயம்
x

கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டு 2½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. பாட்டி, தங்கை படுகாயம் அடைந்தனர்.

சென்னை

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையை அடுத்த சானூர்மல்லாவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42). இவரது மனைவி பரிமளா(35). இவர்களது குழந்தைகள் பிரியங்கா (2½), கீர்த்தனா (1½). நேற்று காலை ஏழுமலை வேலைக்கு சென்று விட்டார். பரிமளா தேசிய ஊரக வேலை திட்ட பணிக்கு சென்று விட்டார்.

வீட்டில் ஏழுமலையின் தாயார் தனம்மாள், குழந்தைகள் பிரியங்கா, கீர்த்தனா இருந்தனர். தனம்மாள் சமையலறைக்குள் சென்று அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சமையலறையில் கியாஸ் கசிந்து அறை முழுவதும் பரவி இருந்தது. இதை கவனிக்காத தனம்மாள் கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது தீப்பிடித்து கொண்டது.

இதில் தனம்மாள், குழந்தைகள் பிரியங்கா, கீர்த்தனா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் சிகிச்சைக்காக உறவினர்கள் சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிரியங்கா பரிதாபமாக இறந்தார். மற்ற இருவரும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஏழுமலை ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story