சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய ரூ.2½ கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய ரூ.2½ கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய ரூ.2 கோடியே 53 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 780 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 4 பெண்கள் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

சென்னை

சென்னை விமான நிலையம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த 2 பெண்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லாததால் இருவரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் இருவரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.55 லட்சத்து 36 ஆயிரம் மதிப்புள்ள 1,042 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

உள்ளாடைக்குள் தங்கம்

அதேபோல் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 2 பெண்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்களது உடைமைகளிலும் எதுவும் இல்லாததால் இருவரையும் தனிஅறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அப்போது அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.37 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

ரூ.2½ கோடி மதிப்பு

மேலும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.39 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள 745 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த 2 பேரின் உள்ளாடைக்குள் இருந்து ரூ.1 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 293 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களாக சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 4 பெண்கள் உள்பட 7 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 53 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 780 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 7 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story