அரசு பஸ் டிரைவர் தீக்குளித்து தற்ெகாலை முயற்சி


அரசு பஸ் டிரைவர் தீக்குளித்து தற்ெகாலை முயற்சி
x

தாரமங்கலம் போக்குவரத்து கழக பணிமனையில் அரசு பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம்

தாரமங்கலம்:-

தாரமங்கலம் போக்குவரத்து கழக பணிமனையில் அரசு பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசு பஸ் டிரைவர்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). அரசு பஸ் டிரைவர். இவர் நேற்றுமுன்தினம் சேலம் சித்தர்கோவில் இளம்பிள்ளை வழித்தடத்தில் செல்லும் டவுன் பஸ்சில் பணியில் இருந்துள்ளார்.

அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக தெரிகிறது. இதனால் பணிமனை மேலாளர் ரவிசந்திரனை போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து இரவு பஸ்சை பணிமனைக்கு கொண்டுவந்துள்ளார். அப்போது பணிமனை மேலாளரை தொடர்பு கொண்ட கணேசன், பஸ்சை பணிமனையில் நிறுத்திவிட்டு உடல் நிலை சரியில்லாததால் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த பணிமனை மேலாளர் ரவிசந்திரன், அவரை மீண்டும் பணிக்கு செல்லுமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சி

இதனால் விரக்தி அடைந்த டிரைவர் கணேசன் பணிமனையில் இருந்த பங்கில் டீசலை பிடித்து தன் மீது ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்த மற்ற ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ெதாடர்ந்து பணிமனை ஊழியர்கள் தாரமங்கலம் போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.

பணிமனைக்கு வந்த போலீசார் கணேசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல்நிலை சரியில்லாத ஊழியருக்கு விடுப்பு வழங்காத காரணத்தால் இரவு நேரத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் போக்குவரத்து ஊழியர்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story