பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்


பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்
x

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார்.

மதுரை,

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழகம் முழுவதும் 14,314 கண்மாய்கள் உள்ள நிலையில், 469 கண்மாய்களில் மட்டுமே முழுமையாக நீர் நிரம்பிஉள்ளது. குறிப்பாக 3,422 கண்மாய்களில் அதாவது 24 சதவீதம் கண்மாய்கள் முற்றிலுமாக வறண்டு உள்ளன.

தென்மேற்கு பருவமழை குறைவு என்று காரணம் சொல்லப்பட்டாலும் கண்மாய்கள் தூர்வாராததே பிரதான காரணம் என்றும், இந்த வடகிழக்கு பருவ மழை காலத்தில் கண்மாய் நிரம்புவதற்கு குடிமராமத்து திட்டம் செய்தால் கண்மாய்கள் நிரம்ப வாய்ப்புள்ளது என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள்.

வடகிழக்கு பருவ மழையில் சென்னை மிகவும் அதிகமாக பாதிக்கப்படும். ஏனென்றால் 2 மீட்டர் உயரம்தான் புவியியல் அடிப்படையில் கடல் மட்டத்திலிருந்து இருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரு லட்சம் தெருக்கள் உள்ளன. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் உலக வங்கி மற்றும் தமிழ்நாடு அரசு நிதியுடன் ரூ. 2,850 கோடி மதிப்பில் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் செயல்படுத்தப்பட்டன. ஏறத்தாழ 3,600 மழைநீர் தேங்கும் இடங்கள் சென்னையில் இருந்தது எடப்பாடியார் எடுத்த நடவடிக்கையால் 40 இடங்களாக குறைக்கப்பட்டது.

தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை எதுவும் முழுமை பெறவில்லை மழை நீர் வடிகால் பணிகள் 50 சதவீதம்தான் முடிந்து இருக்கிறது 100 சதவீதம் முடியவில்லை. இன்னும் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்கும் சூழ்நிலையில் இன்னும் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் முடிய வில்லை. தூர்வாரும்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

தமிழகம் முழுவதும் தாழ்வான பகுதிகள் எத்தனை என்பதையும், அதேபோல கண்காணிப்பு அலுவலர்கள் பட்டியலை முதல்-அமைச்சர் முழுமையாக அறிவிக்கவில்லை. கடந்த தென்மேற்கு பருவமழையில் கண்மாய்கள் வறண்டு போனது அதேபோல் இந்த வடகிழக்கு பருவமழையில் குடி மராமத்து செய்யாததால் பருவமழையில் நீரை தேக்கமுடியாத நிலையில் உள்ளது. ஆகவே முதல்-அமைச்சர் எதிர்க்கட்சி குரலாக நினைக்காமல் மக்களின் குரலாக நினைத்து இந்த வடகிழக்கு பருவ மழையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story