குரூப்-2, 2ஏ, 3ஏ அட்டவணையில் இல்லைஅரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா? தேர்வர்கள் கருத்து


குரூப்-2, 2ஏ, 3ஏ அட்டவணையில் இல்லைஅரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா? தேர்வர்கள் கருத்து
x
தினத்தந்தி 25 Dec 2022 6:45 PM GMT (Updated: 25 Dec 2022 6:46 PM GMT)

குரூப்-2, 2ஏ, 3ஏ அட்டவணையில் இல்லாத அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா? என்பது குறித்து தேர்வர்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

விழுப்புரம்

'காத்துட்டா இருந்தாலும், அது கவர்மெண்ட் துட்டா இருக்கணும்', 'அரசாங்க உத்தியோகம்னா, சும்மாயில்லே?'

-இது போன்ற வாய்மொழிகள் இன்னமும் கிராமங்களில் வலம் வருகின்றன.

பணி பாதுகாப்பு, சுதந்திரம், கணிசமான சம்பளம், பதவி உயர்வுக்கான வாய்ப்பு, ஓய்வு ஊதியம் போன்ற காரணிகளே, பொதுவாக ஒருவரை அரசு வேலைக்கு ஈர்ப்பதாகப் பார்க்கப்படுகிறது.

ஒருகாலத்தில் அரசுத் துறைகளில் இருக்கும் பணிகளுக்கு ஆட்களை கூப்பிட்டு, கூப்பிட்டு கொடுத்து இருக்கிறார்கள். காலப்போக்கில் கல்வியறிவு அதிகரித்து, படித்து முடிக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்தது.

டி.என்.பி.எஸ்.சி.

அதன் பின்னர், தகுதியான நபர்களை தேர்வு செய்து பணியில் சேர்க்கும் முறை கடந்த 1929-ம் ஆண்டு வாக்கில் இருந்து தொடங்கி இருக்கிறது. முதலில் இந்த அமைப்புக்கு மெட்ராஸ் தேர்வாணையம் என்ற பெயர் இருந்த நிலையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பிறகு, 1957-ம் ஆண்டில் மெட்ராஸ் அரசு பணியாளர் தேர்வாணையம் என்றும், அதனைத் தொடர்ந்து, சென்னை மாகாணம், தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டபோது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) என்றும் மாறியது.

1954-ம் ஆண்டில் வகுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறை மற்றும் நடத்தை விதிகள் அடிப்படையில் இந்த ஆணையம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலமாகவே அரசுத்துறைகளில் அடிமட்ட அளவில் இருந்து உயர்மட்ட அளவில், பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் குரூப்-1, 2, 2ஏ, 3, 4 என பிரிவுகளாக பிரித்து நிரப்பப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறைகளில் ஓய்வு பெறுபவர்களின் காலிப்பணியிடங்கள், புதிதாக துறைகளில் தோற்றுவிக்கப்படும் இடங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு, அந்தந்த துறைகள் அளிக்கும் பட்டியல்களை கொண்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுத்திட்ட அட்டவணையை வெளியிட்டு வருகிறது.

அந்த அட்டவணையில் குறிப்பிட்டு இருக்கும் காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்புகளை வெளியிடுவதோடு, அதற்காக விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு என அனைத்து பணிகளையும் மேற்கொண்டு, அந்த பணிக்கு தகுதிவாய்ந்தவர்களை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு செய்து பணி வழங்குகிறது.

தொழில்நுட்பங்கள் வளர, வளர அதற்கு ஏற்ப தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. குறுக்குப் பாதைகளை தேடுபவர்கள் எங்கேதான் இல்லை? என்று சொல்லும் வகையில், இந்தத் தேர்வு முறைகளிலும் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் அரங்கேறியது என்பது, மறுக்க முடியாத உண்மை.

வயது விலக்கு

அந்த சுவடுகள் மீண்டும் டி.என்.பி.எஸ்.சி. மீது பதிந்துவிடக்கூடாது என்ற நோக்கில், அதனை பொறுப்பேற்று முன்னெடுத்து செல்லும் அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தற்போது அதுபோன்ற முறைகேடுகள் பற்றிய எந்த குற்றச்சாட்டுகளுக்கும் இடம் கொடுத்துவிடாதபடி, ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த எச்சரிக்கையுடன் தேர்வை நடத்தி வருகின்றனர்.

இதில் குரூப்-4, குரூப்-2, 2ஏ ஆகிய பிரிவுகளில்தான அதிகமான பணியிடங்களும் இருக்கும் அதிகமான போட்டிகளும் இருக்கும்.

உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட குரூப்-4 பணியிடங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் 21 லட்சத்து 85 ஆயிரத்து 328 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இது பெருமையா? என்று கேட்டால், இல்லை என்றே சொல்ல முடியும். ஏனென்றால், படித்து முடித்த இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் எவ்வளவு பேர் காத்துக்கிடக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணமாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக எதிர்பார்த்தபடி பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படாததால், அதிகபட்ச வயது வரம்பை கடந்தவர்களுக்காக, 2 ஆண்டுகள் வயது விலக்கு அளிக்கப்பட்டது. இந்த சலுகைகளை பெற்றவர்களுக்கு நடப்பு ஆண்டில் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்களில் தேர்வு ஆகுதுதான் கடைசி வாய்ப்பாக இருக்கும்.

அதிர்ச்சி அளிக்கிறது

அப்படி எதிர்பார்த்து காத்திருந்த பலருக்கு, டி.என்.பி.எஸ்.சி. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ஆண்டுத்திட்ட போட்டித் தேர்வு அட்டவணை ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய குரூப்-2, 2ஏ, 3ஏ பதவிகளுக்கான அறிவிப்பு இல்லாதது, குரூப்-4 பணியிடங்களுக்கான காலி இடங்கள் எவ்வளவு? என்ற விவரங்கள் தெரிவிக்காதது அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றன.

குரூப்-1தேர்வுக்கு ஆகஸ்டு மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு நவம்பரில் முதல் நிலை, 2024 ஜூலையில் முதன்மை, டிசம்பரில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் எத்தனை பணியிடங்கள் என்ற விவரங்கள் இல்லாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டுகளில் இருந்து பார்க்கும்போது, ஆண்டுக்கு 23 ஆயிரம், 10 ஆயிரம், 9 ஆயிரம், 8 ஆயிரம் காலிப் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் என்ற அளவிலேயே பணியிடங்கள் அறிவிக்கப்படுகின்றன.

சோளப்பொரி

இது யானைப் பசிக்கு சோளப்பொரி போல் அல்லவா தெரிகிறது? வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் லட்சக் கணக்கானோருக்கு, ஆயிரத்தில் பணியிடங்கள் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?

அதிலும் இந்த ஆண்டு அறிவிப்பில் இதுவரை 1,754 காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் மட்டுமே டி.என்.பி.எஸ்.சி. அட்டவணையில் இடம்பெற்றிருப்பது, அரசுப் பணிகளில் சேரவேண்டும் என்ற ஆர்வத்தில் இரவு பகலாகப் படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது.

இதுபற்றி தேர்வுக்கு தயாராகிவரும் தேர்வர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

கனவு கேள்விக்குறியாகி உள்ளது

விழுப்புரத்தை சேர்ந்த அறிவழகன்:-

நாட்டில் 67 லட்சத்துக்கும் மேற்பட்ட படித்து முடித்த பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். அரசு வேலை என்பது பல இளைஞர்களின் கனவாகவே இருந்து வருகிறது.

தலைமைச்செயலகம் தொடங்கி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் வரை 6 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிகிறது. இந்த சூழலில் டி.என்.பி.எஸ்.சி.யின் 2023-க்கான அட்டவணை வெறும் 1,754 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்பதும், குரூப் 1, 2, 2ஏ மற்றும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை அறிவிக்கப்படாததும் பட்டதாரி இளைஞர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் உள்ள சூழலில் ஓராண்டு காலத்திற்கு புதிய நியமனங்கள் மிக சொற்பமாகவே நடக்கும் என்பது அரசுப்பணிகளை பாதிப்பதுடன், வேலை தேடும் இளைஞர்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை கொடுக்கும்.

ஏற்கனவே அரசு பணிகளில் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டதால் படித்து முடித்த பல இளைஞர்களின் அரசு வேலை கனவு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே அனைத்துப்பிரிவு போட்டித்தேர்வுகளையும் 2023-ம் ஆண்டிலேயே நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.

இடம்பெற செய்ய வேண்டும்

திருவெண்ணெய்நல்லூர் அருகே கருவேப்பிலைப்பாளையம் நித்யா:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், 2023-ம் ஆண்டுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அனைத்து தேர்வர்களும் மிகவும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு தேர்வு குரூப்-4 மற்றும் குரூப்- 2 தேர்வு மட்டுமே. இதில் குரூப்-2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடாதது வருத்தமளிக்கிறது.

குரூப்-4 வெளியிடப்பட்டும் அதற்கான எண்ணிக்கை, காலிப்பணியிடங்கள் விவரம் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரம் என்பதால் குரூப்-4 தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.

இத்தேர்வை உடனடியாக நடத்த வேண்டும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அட்டவணையில் பெரும்பாலான தேர்வர்கள் எழுதக்கூடிய குரூப்-4, குரூப்-2, 2ஏ ஆகிய தேர்வுகள் இடம்பெறாதது, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் அறிவிப்பு வெளியிடாததால் போட்டித்தேர்வு எழுதுபவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

உடனடியாக 2023-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை திருத்தம் செய்து காலிப்பணியிடங்களை அதில் இடம் பெறச்செய்ய வேண்டும்.

எதிர்பார்ப்பு வீணாகிறது

திண்டிவனத்தை சேர்ந்த கவுதம்:-

டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு திட்ட அட்டவணையில் எதிர்பார்ப்புமிக்க உயர்பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு இடம்பெறாதது தேர்வுக்கு தயாரானவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வை ஒரு வருட காலத்துக்கு தள்ளிப்போடுவதால் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது, எதிர்பார்ப்பும் வீணாகிறது.

இவ்வாறு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாலும், வயது வரம்பு கடந்து விடுவதாலும் தேர்வர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கு வயது வரம்பை அதிகப்படுத்த வேண்டும். தேர்வை தள்ளிப்போடுவதால் படித்த பட்டதாரி இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு என்பது கனவாகி போகிறது.

இதை கருத்தில்கொண்டு தேர்வை ஆண்டுதோறும் தவறாமல் நடத்த வேண்டும், அதேநேரத்தில் தேர்வுக்கான கட்டணத்தையும் குறைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

எட்டாக்கனியாகிவிடும்

செஞ்சி அருகே கீழ்பாப்பாம்பாடி வெங்கடேசன்:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள ஆண்டு அறிவிப்பில் குரூப்-1 மற்றும் குரூப்-2, 2ஏ-க்கான உயர்பதவிகளுக்கான தேர்வு இடம் பெறாததால் என்னை போன்ற தேர்வர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. நான் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. 3 முறை போட்டித்தேர்வுகளை எழுதியுள்ளேன்.

இந்த முறையும் தேர்வு எழுத தயாராகி வந்த நிலையில் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பு மிகுந்த மனவேதனையை அளிப்பதாக இருக்கிறது. எனவே அரசின் அனைத்துத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனைத்துப்பிரிவு போட்டித்தேர்வுகளையும் அந்தந்த ஆண்டுகளிலேயே நடத்தி முடித்தால்தான் ஏழை, எளிய மாணவர்கள் அரசு வேலைவாய்ப்பை பெற முடியும்.இல்லையெனில் அது எட்டாக்கனியாகி விடும் என்றார்.

ஏமாற்றம் அளிக்கிறது

கள்ளக்குறிச்சி அருகே க.அலம்பலம் கிராமம் கே.சம்பத்:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே குரூப்-4 தேர்வு கால அட்டவணை வெளியிட்டுள்ளது. அதேபோல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குரூப்-1 தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் காலி பணியிடங்கள் அதிக அளவில் உள்ளன. பட்டதாரி இளைஞர்கள் லட்சக்கணக்கானோர் படித்துவிட்டு டி.என்.பி.எஸ்.சி தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள ஆண்டு திட்ட அட்ட வணையில் குரூப்-2, 2-ஏ, 3-ஏ பிரிவுகளுக்கு அறிவிப்பு இல்லாதது பட்டதாரி இளைஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே குரூப்-2, 2-ஏ, 3-ஏ ஆகிய பிரிவுகளை அட்டவணையில் சேர்த்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றார்.

உளுந்தூர்பேட்டை மதியழகன்:-

இந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அட்டவணை அதிர்ச்சியைத்தான் தந்திருக்கிறது. குரூப்-2, 2ஏ, 3ஏ பிரிவுகளில் புதிய அறிவிப்புகள் இல்லை. குரூப்-4-க்கு வெறும் அறிவிப்பு மட்டும் உள்ளது. இதன்படி பார்க்கையில் இந்த ஆண்டு தேர்வே இல்லாதது போலவே தெரிகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) எவ்வாறு திட்டமிட்டு, தேர்வை அந்தந்த ஆண்டுகளில் நடத்தி முடிவுகளை வெளியிடுகிறதோ? அதேப் போல, டி.என்.பி.எஸ்.சி.யும் தேர்வுகளை நடத்தி அறிவித்தால், தேர்வுக்காக காத்திருக்கும் தேர்வர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்படி நீண்ட இடைவெளி கொடுத்தால், அவர்களுக்கு அரசுத் தேர்வுக்கு தயாராகுவதில் விருப்பம் இல்லாமல் போய்விடும். இதை கருத்தில்கொண்டு, டி.என்.பி.எஸ்.சி. புதிய அறிவிப்புகளை வெளியிடவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அரசுப் பணியாளர்களுக்கு கொரோனா காலத்தில் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக மாற்றி அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டதால், ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாமல் இருக்கிறது என்றும், இனி வரக்கூடிய நாட்களில் 60 வயதை எட்டுபவர்கள் பணி இடங்கள் காலியிடங்களாக கருதி பட்டியல் வரும். அவ்வாறு வரும்போது, அந்த காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் சொல்லப்படுகிறது.

கடந்த 12 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட பணியிடங்கள்

(பாக்ஸ் செய்தி)

கடந்த 2012-ம் ஆண்டு முதல் தற்போது வரையில் இடைபட்ட 12 ஆண்டுகள் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட போட்டித் தேர்வு அட்டவணையில் எவ்வளவு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன என்ற விவரங்கள் வருமாறு:-

ஆண்டு - பணியிடங்கள்

2012 - 23,079

2013 - 10,105

2014 - 5,334 (குரூப்-2, குரூப்-4 பணிகளுக்கான அறிவிப்பு இல்லை)

2015 - 9,078

2016 - 7,996

2017 - 3,781

2018 - 3,285 (குரூப்-4 பணிக்கான அறிவிப்பு இல்லை)

2019 - 8,865

2020 - 81 (கொரோனா பாதிப்பு இருந்த நேரம்)

2021 - 1,818 (கொரோனா பாதிப்பு இருந்த நேரம்)

2022 - 14,028

2023 - 1,754

------------

சென்னை மட்டும் கட்டுரை


Next Story