தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே கவர்னர் வெளியேறியது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது - அன்புமணி ராமதாஸ்


தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே கவர்னர் வெளியேறியது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது - அன்புமணி ராமதாஸ்
x

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக கவர்னரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவை இன்று கவர்னர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்கியது. இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய கவர்னர், திராவிட மாடல், தமிழ்நாடு என்ற வார்த்தைகளையும் அண்ணா, அம்பேத்கர், கலைஞர் என்ற பெயர்களையும் படிக்காமல் புறக்கணித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அச்சடிக்கப்பட்ட உரையை கவர்னர் முறையாக படிக்காதது தவறு என்றும் அச்சடிக்கப்பட்ட உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்றும் பேரவையிலேயே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்ததை தொடர்ந்து, முறையாக தேசிய கீதத்துடன் கூட்டம் முடிப்பதற்கு முன்னதாகவே கூட்டத்திலிருந்து பாதியிலேயே கவர்னர் புறப்பட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில்,

தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுனர் தவிர்த்திருக்கிறார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையும் அவமதிக்கும் செயலாகும்.

தமிழ்நாடு அரசால் குறிப்பிடப்படும் சில சொற்களில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை; ஆளுனருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை மாற்றாமல் படிப்பது தான் நாகரிகமும், மரபும் ஆகும்.

அச்சிடப்பட்ட ஆளுனர் உரையை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் என்று கோரி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்த போது, அவை நடவடிக்கைகள் முடிவடைந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுனர் வெளியேறியது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும் ஆளுனரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுனரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




Next Story