இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x

விபத்தில் விவசாயி பலியான சம்பவத்தில், இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள வேல்வார்கோட்டை கிராமம் சீலபாடியான்களத்தை சேர்ந்தவர் வீராசாமி (வயது 48). விவசாயி. அவருடைய மனைவி ஜோதியம்மாள் (40). இவர்கள் 2 பேரும், கடந்த 2016-ம் ஆண்டில் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடியில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது, அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வீராசாமி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில் தனக்கு இழப்பீடு கேட்டு, வேடசந்தூர் கோர்ட்டில் ஜோதியம்மாள் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வநாயகி, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஜோதியம்மாளுக்கு ரூ.8 லட்சம் வழங்க கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீடு தொகை வழங்கவில்லை.

இதனையடுத்து ஜோதியம்மாள் தரப்பில், வேடசந்தூர் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி சரவணகுமார், இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் நாகர்கோவிலுக்கு செல்வதற்கு வேடசந்தூர் பஸ்நிலையத்தில் தயாராக நின்று கொண்டிருந்த குளிர்சாதன வசதி கொண்ட அரசு சொகுசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். பின்னர் அந்த பஸ், கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.


Next Story