அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்


அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்
x

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.

புதுக்கோட்டை

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆழ்குழாய் கிணற்று பாசனம் மூலமாக, விவசாயிகள் கோடை நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது நெல் அறுவடை பணிகளும் நடந்து வருகின்றன. கடந்த 15 நாட்களாக அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை வடகாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர். இதையடுத்து தினமும் தங்களது குடும்பத்தினருடன் வந்து நெல் மணிகளை பிரித்து காயவைப்பதும், பின்னர் படுதாவை கொண்டு மூடி வைப்பதுமாக இருந்து வருகின்றனர். இதனால் வேறு வேலைகளுக்கு கூட செல்ல முடியாத நிலையில், நெல் மணிகளை காவல் காத்து வருவதாக விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர். மேலும் எப்போது நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்பது தெரியாமலும், வட்டிக்கு பணம் வாங்கி நெல் விவசாயம் செய்திருந்த விவசாயிகள் எத்தனை நாள் காத்திருப்பது என நினைத்து, குவித்து வைத்து இருந்த நெல் மணிகளை தனியாரிடம் குறைந்த விலைகளில் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் இப்பகுதிகளில் திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் வயல்களில் சாய்ந்து சேதமடைந்த நிலையில், சம்பந்தபட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். எனவே இப்பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story