சென்னை கொருக்குப்பேட்டையில் பாட்டியை சுத்தியலால் அடித்துக்கொன்ற பேரன் கைது


சென்னை கொருக்குப்பேட்டையில் பாட்டியை சுத்தியலால் அடித்துக்கொன்ற பேரன் கைது
x

ரூ.1 லட்சம் பணத்தகராறில் பாட்டியை சுத்தியலால் அடித்துக்கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

வீடு கட்ட பணம்

சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் விசாலாட்சி (வயது 70). இவர், வீட்டு வேலைகள் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இவருடைய மகள் அமுதா. இவர் திருமணமாகி தனது குடும்பத்துடன் செங்குன்றத்தை அடுத்த காந்தி நகர் நேரு தெருவில் வசித்து வருகிறார். அமுதாவின் மகன் சதீஷ்(28).

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விசாலாட்சி, தன்னுடைய மகள் அமுதாவுக்கு புதிய வீடு கட்ட ரூ.2 லட்சம் கடனாக கொடுத்தார். அதில் ரூ.1 லட்சத்தை அமுதா திருப்பி கொடுத்து விட்டார். மீதம் ரூ.1 லட்சம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இது தொடர்பாக விசாலாட்சி அடிக்கடி தனது மகள் அமுதாவிடம் கேட்டு வந்தார். இதனால் தாய்-மகள் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

சுத்தியலால் அடித்துக்கொலை

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு அமுதா, தனது மகன் சதீசுடன் கொருக்குப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே ரூ.1 லட்சம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ், திடீரென வீட்டில் இருந்த சுத்தியலால் தனது பாட்டி விசாலாட்சி தலையில் ஓங்கி அடித்தார். மேலும் ஆத்திரம் அடங்காமல் பிளேடாலும் மூதாட்டியின் உடல் முழுவதும் கீறினார். வலியால் அலறிய விசாலாட்சியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மூதாட்டியை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மூதாட்டி விசாலாட்சி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தகராறில் பாட்டியை சுத்தியலால் அடித்துக்கொன்ற பேரன் சதீசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story