ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா? வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து


ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா? வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து
x

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு தலைவர் தெரிவித்துள்ள ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா? என்பது குறித்து வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜி.எஸ்.டி.

வரி விதிப்பு என்பது மன்னர் காலத்தில் இருந்தே தொன்றுதொட்டு வருகிறது. மக்கள் செலுத்தும் வரி மட்டும் இல்லை என்றால், அரசுகள் செயல்படமுடியாது. வரிகளின் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்தே அரசுகள் மக்கள் நலனுக்கான திட்டங்களை தீட்டி, செயல்படுத்துகின்றன. வரிகளை பொறுத்தமட்டிலும், நேரடி வரி மற்றும் மறைமுக வரி என்ற 2 பிரிவுகள் உள்ளன. அந்தவகையில், சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. மறைமுக வரியாகும். ஜி.எஸ்.டி. வரி முறையை உலகிலேயே முதலாவதாக 1954-ம் ஆண்டு பிரான்சு நாடு அறிமுகப்படுத்தியது.

தற்போது அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மியான்மர் உள்பட சுமார் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜி.எஸ்.டி. வரி நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தமட்டில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, 'ஒரே நாடு, ஒரே வரி' என்ற தலைப்பில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்தது. மத்திய கலால் வரி, கூடுதல் சுங்க வரி, சேவை வரி, பொழுதுப்போக்கு வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்) உள்பட வரிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட வரியாக ஜி.எஸ்.டி. இருக்கிறது.

ஒரே வரி விகிதம்

நாடு முழுவதும், மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. ஒரே மாநிலத்துக்குள் நடைபெறும் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் அதாவது மத்திய ஜி.எஸ்.டி. (சி.ஜி.எஸ்.டி.) மத்திய அரசாலும், மாநில ஜி.எஸ்.டி. (எஸ்.ஜி.எஸ்.டி.) மாநில அரசினாலும் விதிக்கப்படுகிறது. அதன் வருவாயை மத்திய-மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. மாநிலங்களுக்கிடையே நடைபெறும் பரிவர்த்தனைகள் மற்றும் சரக்கு அல்லது சேவை இறக்குமதிக்கு, ஒருங்கினைந்த ஜிஎஸ்டி (ஐ.ஜி.எஸ்.டி.) மத்திய அரசினால் விதிக்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி.யை பொறுத்தமட்டில், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகிய 4 நிலைகளில்(சிலாப்ஸ்) வரி விதிக்கப்படுகிறது. தற்போதைய வரி விதிப்பு முறை என்பது, சேவை துறைகளுக்கு கட்டுமான உருவாக்கத்துக்கான நிதி தேவையை பூர்த்தி செய்ய இயலாத அளவுக்கு இருப்பதால், ஜி.எஸ்.டி.யில் ஒரே நிலையில் அதாவது விலக்கு எதுவும் இல்லாமல் ஒரே விகிதத்தில்(ஒரே சிலாப்) வரி விதிப்பினை கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் பிபேக் தேப்ராய் சமீபத்தில் தெரிவித்து இருக்கிறார்.

சாத்தியமா?

ஜி.எஸ்.டி. என்பது 'ஒரே நாடு ஒரே வரி' என்ற அடிப்படையில் உருவானது. நாடு முழுவதும் ஒரே சீராக விதிக்கப்படும் அதில், வரி விகிதங்களில் சில பிரிவுகள் இருக்கின்றன. பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவரின் கருத்து ஏற்கப்பட்டால், 'ஒரே நாடு ஒரே வரி' என்ற நிலையில் இருந்து 'ஒரே நாடு, ஒரே வரி, ஒரே வரி விகிதம்' என்ற நிலைக்கு ஜி.எஸ்.டி. மாறிவிடும். 'ஒரே ஜி.எஸ்.டி., ஒரே வரி' என்ற முன்மொழிவு சாத்தியமா? என்பது குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு முனை வரி



தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் பி.பாண்டியராஜன்:-

ஜி.எஸ்.டி. வந்த பிறகு, எந்த பொருளுக்கு, எந்த வரி விகிதம் என்று வியாபாரிகளுக்கே சற்று குழப்பமாக இருக்கிறது. பலதரப்பட்ட பொருட்கள் இருப்பதால் வரியை கணக்கிட்டு செலுத்துவதில் சிக்கல் இருக்கிறது. குழப்பமாக இல்லாமல் ஒரு முனை வரியாக போட்டால் நன்றாக இருக்கும். இதேபோல பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களுக்கு வரியே இல்லாமல் இருந்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும்.

2 விகிதங்களாக நிர்ணயிக்கலாம்



அசோக்நகரை சேர்ந்த சூப்பர்மார்க்கெட் மேலாளர் ஜெபஸ்டின்:-

ஜி.எஸ்.டி.க்கு ஒரே வரி விகிதத்தை கொண்டு வந்தால், வியாபாரிகளுக்கு எளிமையானது. அரசுக்கு வருமானம் நிச்சயமாக கூடும். ஒரே வரி விகிதம் என்ற நிலை வரும்போது, இப்போது இருக்கும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வரி விதிப்பில் இருந்து சராசரியாக குறிப்பிட்ட அளவை நிர்ணயம் செய்வார்கள். இதனால் ஏழைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. என்னை பொறுத்தவரையிலும், அரிசி உள்பட அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் அன்றாட பயன்பாடு இல்லாத பொருட்கள் என்று வகைப்படுத்தி 2 பிரிவுகளாக வரி விகிதத்தை நிர்ணயம் செய்யலாம். இவ்வாறு செய்தால் ஏழைகள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

வரியே வேண்டாம்



ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த வக்கீல் கிரேஸ் மதிஷா:-

ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்துவதற்கு முன்பு வரையிலும் மாத பட்ஜெட்டில் பாதிப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் ஜி.எஸ்.டி. அமல்படுத்திய பின்னர் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துவிட்டது. இப்போது வெவ்வேறு விகிதங்களில் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. இதில் ஒரே மாதிரியாக கொண்டு வந்தால், அது எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. வரி விகிதத்தை மாற்றியமைக்கும்போது இப்போது இருப்பதை விடவும் கூடுதலாக இருந்தால், பாதிப்பு மேலும் அதிகரிக்கும். எனவே ஒட்டுமொத்தமாக ஜி.எஸ்.டி. வரி வசூலிப்பதையே நிறுத்திவிட்டால் நன்றாக இருக்கும்.

விலை குறைவாக இருக்கவேண்டும்



மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த குடும்ப தலைவி எஸ்.ரேகா:-

ஜி.எஸ்.டி. வரி வந்ததுக்கு பின்னர் எல்லா பொருட்களின் விலையும் அதிகரித்துவிட்டது. கடைக்காரர்களிடம் பொருட்களின் விலையை பற்றி கேட்டால், ஜி.எஸ்.டி. கூடிவிட்டது, அதனால்தான் பொருட்களின் விலையும் அதிகரித்துவிட்டது என்று சொல்கிறார்கள். ஜி.எஸ்.டி. வருவதற்கு முன்பு பொருட்களின் விலை நியாயமாக இருந்தது. ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் செய்யட்டும், ஆனால் பொதுமக்களுக்கு பொருட்களின் விலை குறைவாக இருக்க வேண்டும்.

வரவேற்பு



அண்ணாநகரை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் என்.நந்தகோபால்:-

ஜி.எஸ்.டி.யை ஒரே விகிதத்தில் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால் அதேநேரத்தில் அந்த வரிவிகிதம் மக்களுக்கு பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பார்கள். ஒரே வரிவிகிதம் என்று கூறி அதிகமாக விதித்தால், மக்களிடம் இருந்து எதிர்வினை கருத்து தான் வரும். இதுபற்றி மத்திய அரசு, மக்களிடம் கருத்துகள் கேட்கலாம். ஏனென்றால் அவர்கள் தான் இதில் அதிக பாதிப்போ? பலனையோ? அடைவார்கள். எனவே அதற்கு முதலில் ஒரு முயற்சியை மேற்கொண்டால், ஒரே வரி விகிதம் சாத்தியம் ஆகும். இல்லையென்றால், ஏற்கனவே ஜி.எஸ்.டி. இருக்கும் எதிர்ப்பை விட கூடுதல் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும்.

உங்களுக்கு தெரியுமா?

ஜி.எஸ்.டி. மூலம் கடந்த அக்டோபர் மாதம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 718 கோடி ஆகும். இது ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்திய பின்னர் மாத வரி வருவாயில் கிடைத்த 2-வது அதிகபட்சம் ஆகும். கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 540 கோடி கிடைத்ததே, ஒரு மாதத்துக்கு இதுவரை கிடைத்த அதிகபட்சமாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.10 லட்சத்து 45 ஆயிரத்து 52 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.8 லட்சத்து 5 ஆயிரத்து 879 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டை விடவும், நடப்பாண்டு 7 மாதங்களில் மட்டும் ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.2 லட்சத்து 39 ஆயிரத்து 173 கோடி அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு பின்னர் படிப்படியாக பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இயல்பு நிலையை எட்டி வருவதே இதற்கு முதன்மையான காரணமாக கூறப்படுகிறது.


Next Story