கனமழை எதிரொலி: தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


கனமழை எதிரொலி: தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
x

கோப்புப்படம் 

தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி,

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் இன்று தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.

இந்த நிலையில், கனமழை எதிரொலியாக தாமிரபரணி கரையோர மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். மின்சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும், மருதூர், திருவைகுண்டம், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதேபோல ஆற்று பகுதியில் குளிக்கவோ, தண்ணீரில் இறங்கவோ கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story