முதல் முறையாக கோவளம், முட்டுக்காடு பகுதிகளை சுற்றிப்பார்க்க ஹெலிகாப்டர் வசதி


முதல் முறையாக கோவளம், முட்டுக்காடு பகுதிகளை சுற்றிப்பார்க்க ஹெலிகாப்டர் வசதி
x

நாளை முதல் 15-ந்தேதி வரை இந்த ஹெலிகாப்டர் பயணம் நடைபெறும் என ஹெலிகாப்டர் இயக்கும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் வரை வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் பயணம் செய்ய தனியார் பங்களிப்புடன் வான்வழி பயண சேவை நடத்துவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டது. சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு இயக்குனரின் ஒப்புதல் பெறுவது காரணமாக இந்த பணிகள் தாமதமானது.

இந்த நிலையில் தற்போது விமான நிலைய இயக்குனரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது. இதையடுத்து தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் சேவை சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில் மாமல்லபுரம் வரை பறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு காரணம் மாமல்லபுரம் அருகே கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைந்துள்ளதால் பாதுகாப்பு கருதி அனுமதி வழங்கப்படவில்லை. முதற்கட்டமாக கோவளத்தில் இருந்து முட்டுக்காடு படகு துறை, கேளம்பாக்கம், திருவிடந்தை போன்ற பகுதிகளை ஹெலிகாப்டரில் சுற்றி பார்த்து விட்டு மீண்டும் கோவளத்தில் வந்து இறங்கும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தனியார் நிறுவனத்தின் சார்பில் முதல் முறையாக நேற்று இதற்கான முதற்கட்ட பயணம் தொடங்கியது. ஆன்லைன் மூலம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆா்வமுள்ள பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் நேற்று காலை 11 மணி முதல் ஹெலிகாப்டரில் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

ஹெலிகாப்டரில் பயணம் செய்ய ஒரு பயணிக்கு கட்டணமாக ரூ.5 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வானில் வட்டமடித்து சுமார் 10 நிமிடம் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டரில் பயணம் செய்வதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று முதல் நாளிலேயே சுமார் 20 முறை வான்வழி ஹெலிகாப்டர் இயக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்த ஏராளமானோர் ஹெலிகாப்டரில் பறந்து பைனாகுலர் மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரையின் ரம்மிய காட்சிகள், இயற்கை காட்சிகள், திருவிடந்தை கோவில் கோபுரம், முட்டுக்காடு படகு துறையில் அலையில் சீறி செல்லும் படகுகள், முட்டுக்காடு முகத்துவாரம் வழியாக பலத்த சீற்றத்துடன் கடலில் கலக்கும் மழைநீரின் ரம்மிய காட்சிகள் போன்றவற்றை பார்த்து ரசித்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை என்பதால் ஏராளமானோர் பட்டாசு மற்றும் ராக்கெட் வெடிப்பார்கள் என்பதால் ஹெலிகாப்டர் பயண நிகழ்ச்சி இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (திங்கட்கிழமை) முதல் 15-ந்தேதி வரை இந்த ஹெலிகாப்டர் பயணம் நடைபெறும் என ஹெலிகாப்டர் இயக்கும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story