மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது.. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? முதல்-அமைச்சர் தாக்கு


மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது.. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? முதல்-அமைச்சர் தாக்கு
x
தினத்தந்தி 30 March 2024 4:48 AM GMT (Updated: 30 March 2024 6:05 AM GMT)

எனக்கு தமிழ் தாய்மொழியாக கிடைக்காதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என பிரதமர் மோடி நேற்று பேசினார்.

சென்னை,

நமோ செயலி மூலம் "எனது பூத் வலிமையான பூத்" என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க. தொண்டர்களுடன் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "எனக்கு தமிழ் தாய்மொழியாக கிடைக்காதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தமிழில் என்னால் பேச முடியவில்லை என்ற வருத்தம் மனதில் ஆழமாக உள்ளது. தமிழின் பெருமைகளை உரக்க சொல்ல வேண்டும்." என்றார்.

இந்த நிலையில், பிரதமரின் இந்த பேச்சுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்வினையாற்றியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"நேற்று மாலைச் செய்தி: தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!

நேற்று காலைச் செய்தி: அழகிய தமிழ்ச்சொல் 'வானொலி' இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?

ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்? கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

பிரதமர் மோடி அவர்களே.. கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான், அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு. விமானங்களில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.

எங்கும் இந்தி! எதிலும் இந்தி என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை. தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்." இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story