இன்று தமிழக எம்.பிக்களை சந்திக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா


இன்று தமிழக எம்.பிக்களை சந்திக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா
x

தமிழ்நாடு அரசு கோரிய ரூபாய் 37,907 கோடி நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்த உள்ளனர்.

டெல்லி,

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வட தமிழக மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 3, 4 ஆகிய தேதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக அதி கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. மேலும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிகப்பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில், மிக்ஜம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண தொகையை வழங்கக்கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் குழு முடிவு செய்தனர். அதன்படி சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்குமாறு கேட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று தமிழக எம்பிக்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பில் மிக்ஜம் புயல் பாதிப்பு மற்றும் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கும் நிவாரண நிதியை வழங்கக் கோரிக்கை வைக்க உள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு அரசு கோரிய ரூபாய் 37,907 கோடி நிவாரண நிதியை உடனே வழங்க வலியுறுத்த உள்ளனர்.


Next Story