"எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் எப்படி ஆஜராகலாம்?" - தமிழக அரசு கடும் ஆட்சேபம்


எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் எப்படி ஆஜராகலாம்? - தமிழக அரசு கடும் ஆட்சேபம்
x

டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் எப்படி ஆஜராகலாம் என தமிழக அரசுத் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

சென்னை,

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், "வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்த்தல்ல. இந்த மனுவை தனிநீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அதனையடுத்து மத்திய அரசு வழக்கறிஞர் ராஜு ஆஜராகி, எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜராக எதிர்ப்பு தெரிவித்த தலைமை வழக்கறிஞர், எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ள நிலையில் வருமான வரித்துறைக்காக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ராஜு எப்படி எஸ்.பி.வேலுமணி ஆதரவாக ஆஜராகலாம் எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த மனு தொடர்பாக கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்ய இருப்பதால் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார். இதைத்தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விளக்கிய தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு சாதகமாக ஒப்பந்தங்களை வழங்கிய வேலுமணி, தன்னை வளப்படுத்திக் கொண்டது, அதிகார துஷ்பிரயோகம் என வாதிட்டார்.

மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆஜராகி வருவதாக எஸ்.பி.வேலுமணி தரப்பு மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த பொது நல வழக்குடன், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த குற்றவியல் பிரிவில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் சேர்த்து தான் விசாரிக்கபட்டன என்பதால், வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்துள்ள குற்றவியல் மனுவை இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கலாம் என தெரிவித்தார்.

மேலும், எந்த ஆதாரமும் இல்லை என்ற ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை புறக்கணித்துவிட்டு, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் எஸ்.பி.வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கை ரத்து செய்யக் கோரிய எஸ்.பி.வேலுமணியின் மனுவை விசாரிக்க அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபங்கள் தொடர்பான உத்தரவை நாளை மறுநாளை (புதன்கிழமை) தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story