நடிகை மீனா கணவர் எப்படி இறந்தார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


நடிகை மீனா கணவர் எப்படி இறந்தார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

நடிகை மீனா கணவர் கொரோனாவால் இறக்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

கொரோனா தொற்றால் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இறந்ததாக கூறப்பட்டது. இதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்ததாக சொல்லப்படும் தகவல் தவறு ஆகும். அவர், கடந்த டிசம்பர் மாதம் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் வீட்டிலேயே 'ஆக்சிஜன்' உதவியுடன்தான் இருந்துள்ளார். அதன்பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 6 மாதமாக மருத்துவமனையில் சிகிச்சையில்தான் இருந்தார்.

அவருக்கு இருதயம், நுரையீரல் ஆகிய 2 உறுப்புகள் செயலிழந்துவிட்டது. 95 நாட்கள் 'எக்மோ' சிகிச்சை பிரிவில் இருந்தார். நான் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். அவர் சுயநினைவு இல்லாமல் இருந்தார். அவரது ரத்தம் சார்ந்த 2 உறுப்புகள் தானமாக கிடைத்தால் முன்னுரிமை கொடுத்து அவரை காப்பாற்றுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையின் பேரில் பல்வேறு முயற்சிகள் எடுத்தோம்.

ஆனால் அவருடைய துரதிருஷ்டம் எந்த ஊரிலும் அவருக்கான உறுப்புகள் கிடைக்கவில்லை. அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் தற்போது அவர் கொரோனா தொற்றால் இறக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story