மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி


மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:45 PM GMT)

மேல்மலையனூர் அருகே வயலில் மின்மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்ச முயன்ற போது மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்தனர்.

விழுப்புரம்

மேல்மலையனூர்,

மின்சாரம் தாக்கியது

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே மேல்வைலாமூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லெண்ணன் மகன் பெரியசாமி (வயது 52), விவசாயி. இவரது மனைவி அமராவதி(47).

இவர்களுக்கு 3 மகள்களும், தென்னரசு(22) என்ற மகனும் உள்ளனர். மகள்கள் 3 பேருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். தென்னரசு மட்டும் தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், பெரியசாமி மற்றும் அமராவதி ஆகியோர் அதே பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக நேற்று முன்தினம் இரவு சென்றனர்.

பின்னர், பெரியசாமி அங்குள்ள மின்மோட்டாரின் 'சுவிட்ச்சை ஆன்' செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் கூச்சலிட்ட அவரை அமராவதி காப்பாற்ற முயன்றதாக தெரிகிறது. அப்போது அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

கணவன்-மனைவி பலி

இந்த விபத்தில் கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனிடையே வயலுக்கு சென்ற தாயும், தந்தையும் வெகுநேரமாகியும் வராததால் தென்னரசு வயலுக்கு சென்று பார்த்த போது அவர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது தெரிந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவலூர்பேட்டை போலீசார் இறந்த இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி இருவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story