தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்கும் ஆர்வம் அதிகரிக்குமா?


தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்கும் ஆர்வம் அதிகரிக்குமா?
x

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்கும் ஆர்வம் அதிகரிக்குமா?என்பது குறித்து தேர்வு எழுத தயாராகி வரும் மாணவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.

நாமக்கல்

தமிழ்நாடு சட்டசபையில், 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 20-ந் தேதி தாக்கல் செய்தார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் அதில் இடம்பெற்று இருந்தது.

அதன்படி, தமிழ்நாட்டில் இருந்து இந்திய குடிமைப் பணி தகுதித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

ரூ.10 கோடி நிதி

முதல் நிலைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500-ம், முதன்மைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் தமிழக அரசின் அண்ணா மேலாண்மை நிலையம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த மையம் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இங்கு இளநிலை உதவியாளர்கள் முதல் இந்திய ஆட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறுபிரிவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் உதவித் தொகை குறித்து, தேர்வு எழுத தயாராகி வரும் மாணவர்கள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதன் விவரம் வருமாறு:-

இலவச பயிற்சி

குடிமைப்பணியில் முதல் நிலைத் தேர்வு எழுத இருக்கும் நாமக்கல்லை சேர்ந்த ஆனந்த்:-

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு தயாராகும் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 தமிழக தேர்வர்களுக்கு மாதம் ரூ.7,500-ம், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வுக்கு தயாராகும் மாணவருக்கு ரூ.25 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்து உள்ளது. மத்திய அரசின் குடிமை பணியில் தமிழக மாணவர்களின் பங்களிப்பை அதிகபடுத்தும் நோக்கில், செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் வரவேற்கத்தக்கது. மேலும் பாராட்டுக்கு உரியது.

இந்த உதவித்தொகை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் நிதிசார் சுமையை குறைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் மெட்ரோ நகரங்களில் மட்டுமே இலவச வகுப்புகள் என்ற நிலையை மாற்றி மாவட்டம் தோறும் உதவித் தொகையுடன் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதனால் ஏழை கிராமபுற மாணவ, மாணவிகள் மற்றும் பகுதி நேர பணிக்கு சென்று தயாராகும் நபர்களுக்கும் உதவியாக இருக்கும். இதுவே சமூக நீதியை உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதிப்படுத்தும்.

பங்களிப்பை உயர்த்தும்

குடிமைப்பணியில் முதல் நிலைத் தேர்வு எழுத இருக்கும் நாமக்கல்லை சேர்ந்த சுனில்குமார்:-

தமிழக அரசு குடிமை பணிகளில் தமிழக மாணவர்களின் பங்களிப்பை உயர்த்தும் வகையில் உதவித்தொகை அறிவித்து, அதற்காக ரூ.10 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்து உள்ளது. நான் குடிமைபணி தேர்வுக்கு தயாராகும் மாணவன் என்கிற வகையில் இத்திட்டத்தை வரவேற்கிறேன்.

மேலும் தமிழக தேர்வர்களின் மீதான மாநில அரசின் அக்கறை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. மேலும் வட்டாரம், மண்டலங்கள் தோறும் பயிற்சி, ஆண்டு தோறும் நுழைவு தேர்வு போன்றவை மாணவர்களை ஊக்கப்படுத்துவதோடு, பணிசுமையை குறைக்கும். இந்த ஊக்கத்தொகை குடிமை பணிகளில் தமிழக மாணவர்களின் பங்களிப்பை உயர்த்தும் என்பதில் ஐயம் இல்லை.

மகிழ்ச்சியாக உள்ளது

குடிமைப்பணியில் முதல் நிலைத் தேர்வு எழுத இருக்கும் திருச்செங்கோட்டை சேர்ந்த ரம்யா:-

கடந்த காலங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கையும், தேர்வில் வெற்றி பெற்று பயிற்சிக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது மாணவர்கள் மத்தியில் கொஞ்சம், கொஞ்சமாக விழிப்புணர்வு வர ஆரம்பித்து உள்ளது. இதனால் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு பட்ஜெட்டில் மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவித்து இருப்பது மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. இதனை முழு மனதுடன் வரவேற்கிறோம். ஆயிரம் மாணவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 வழங்குவதாக கூறி உள்ளனர். இதில் தொகையை சற்று குறைத்து கொண்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் இன்னும் அதிகம் பேர் பயனடைவார்கள். அதேபோல் இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்றும் தெரியவில்லை. தற்போது மே மாதம் முதல்நிலைத் தேர்வு நடக்க இருக்கிறது. மாணவர்கள் நலன் கருதி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேருதவியாக இருக்கும்

திருச்செங்கோட்டை சேர்ந்த மற்றொரு மாணவி தர்ஷினி:-

நான் பி.எஸ்.சி. இயற்பியலில் பட்டம் பெற்று, தற்போது குடிமை பணி தேர்வுக்கு தயாராகி வருகிறேன். தமிழக அரசின் இந்த ஊக்கத்தொகை அறிவிப்பு ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு பேருதவியாக இருக்கும். குடிமைப்பணி தேர்வு என்பது ஒரு ஆண்டில் முடிக்க கூடிய படிப்பு இல்லை. குறைந்தபட்சம் 2 அல்லது 3 ஆண்டுகள் வெளியூரில் தங்கி இருந்து படிக்க வேண்டும்.

இது கிராமப்புறங்களில் இருந்து வருபவர்களால் சாத்தியப்படுவதில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் அவர்களுக்கு ஏற்படும் செலவினங்களை தாங்கி கொள்ளும் நிலையில் இல்லாததால் பல மாணவர்கள் இந்த தேர்வு முறையில் இருந்து வெளியே சென்றுவிடுகின்றனர். தற்போது அரசு பட்ஜெட்டில் நிதி உதவி அறிவித்திருப்பது பொருளாதார பிரச்சினையால் தேர்வு எழுத முடியாமல் செல்லும் மாணவர்களை தடுத்து மீண்டும் தேர்வு எழுத வைக்க முடியும். அரசின் முயற்சிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வெற்றிக்கு வாய்ப்பு

குடிமைப்பணியில் பாதுகாப்பு உற்பத்தி துறை சிறப்பு செயலாளர் பா.கிருஷ்ணமூர்த்தி கூறும் போது, 'நான் கடந்த 2002-ம் ஆண்டு குடிமைப்பணி தேர்வு எழுதி அதில் பாதுகாப்பு துறையில் பணி இடத்தை பெற்று பணியாற்றி வருகிறேன். நாங்கள் படிக்கும் போது இதுபோன்ற நிதி உதவி திட்டங்கள் எதுவும் இல்லை. பெற்றோர்களை சார்ந்தே படித்து தேர்வுகளை எழுதினோம். இதுபோன்ற திட்டங்கள் அப்போது இருந்திருந்தால் விரைவாக வெற்றி பெற்று பணிகளுக்கு சென்றிருப்போம். பிற மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்கள் உள்ளது. நம்முடைய மாநிலத்தில் தற்போது மாணவர்களுக்கு அரசு பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் நிதி உதவி திட்டம் வரவேற்கத்தகுந்தது. இதன் மூலம் மாணவர்கள் பலர் பயனடைவதுடன், தேர்வுகளிலும் அதிகம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது' என்றார்.


Next Story