சாயர்புரம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண்ணை அடித்துக் கொன்ற கணவர்


சாயர்புரம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண்ணை அடித்துக் கொன்ற கணவர்
x
தினத்தந்தி 18 Oct 2023 6:45 PM GMT (Updated: 18 Oct 2023 6:46 PM GMT)

சாயர்புரம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண்ணை அடித்துக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண்ணை அடித்துக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

எலக்ட்ரீசியன்

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே தங்கம்மாள்புரம் மேல தெருவைச் சேர்ந்தவர் ஜெயமாரி (வயது 44). இவர் சாயர்புரம்- தேரி ரோட்டில் உள்ள தனியார் தும்பு நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி சந்தியா (31). இவர்களுக்கு ரோகித் குமரன் (7) என்ற மகனும், ஹரிணி (4) என்ற மகளும் உள்ளனர்.

அடித்துக்கொலை

கடந்த 16-ந்தேதி மாலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் காலையிலும் அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த ஜெயமாரி, மனைவி சந்தியாவை அடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சந்தியா உணவு எதுவும் சாப்பிடாமல் மயங்கிய நிலையில் கிடந்தார்.

தொடர்ந்து அவரை சாயர்புரம் நடுவக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சந்தியா இறந்துவ ிட்டதாக தெரிவித்தார்.

கணவர் கைது

இதுகுறித்து சாயர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் தேவ சகாயம் மற்றும் போலீசார் விரைந்து சென்று, சந்தியா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஜெயமாரியை கைது செய்தனர். சாயர்புரம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story