வெவ்வேறு விபத்துகளில் ஊராட்சி துணை தலைவர் உள்பட 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில்  ஊராட்சி துணை தலைவர் உள்பட 2 பேர் பலி
x

வெவ்வேறு விபத்துகளில் ஊராட்சி துணை தலைவர் உள்பட 2 பேர் பலியாகினர்.

தேனி

ஆடுகள்

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கோணாம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 43). எர்ணம்பட்டி ஊராட்சி துணைத் தலைவர். நேற்று இரவு இவர், தனது மனைவி பாப்புவுடன் போடியில் இருந்து மோட்டார்சைக்கிளில் கோணாம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். போடி-தேவாரம் சாலையில் சமத்துவபுரம் பெரியார் சிலை அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே 2 ஆடுகள் வந்தன.

அப்போது ஆடுகள் மீது மோதாமல் இருக்க செல்வம் பிரேக் போட்டார். அதில் மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து செல்வம் தவறி கீழே விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஊராட்சி துணை தலைவர் பலி

பின்னர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பு கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் ஷேக் பரீத் (24). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலை நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மலர் கண்ணன் (22). இவரும் அதே மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார்.

இன்று இவர்கள் இருவரும் எருமலை நாயக்கன்பட்டியில் இருந்து மோட்டார்சைக்கிளில் வத்தலக்குண்டுக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை ஷேக் பரீத் ஓட்டி சென்றார். பெரியகுளம் -வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் காட் ரோடு அருகே சென்று கொண்டிருந்தனர்.

வாகனம் மோதல்

அப்போது அந்த வழியாக வந்த வாகனம், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் ஷேக் பரீத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மலர்கண்ணன் படுகாயமடைந்தார். தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஷேக் பரீத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மலர்கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story