தூத்துக்குடியில் தனியார் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்
தூத்துக்குடியில் தனியார் கல்லூரி மாணவர்கள் நேற்று 2-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
தனியார் கல்லூரி
தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சுமார் 4 ஆயிரத்து 300 மாணவ, மாணவியர்கள் சுயநிதி மற்றும் ரெகுலர் பிரிவில் படித்து வருகின்றனர். தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 2 மடங்கு அதிகபடியான கட்டணத்தை செலுத்த வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
போராட்டம்
இதனை கண்டித்து இந்திய மாணவர் சங்க நிர்வாகி நேசமணி தலைமையில் மாணவர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். ஆனாலும் கட்டணத்தை குறைக்கவில்லை. அதே நேரத்தில் போராட்டத்துக்கு தலைமையேற்ற மாணவர் சங்க நிர்வாகியை சஸ்பெண்டு செய்து கடிதம் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீநாத், நேசமணி, சதீஷ், சுரேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.