விழுப்புரத்தில் நுங்கு விற்பனை அமோகம்


விழுப்புரத்தில் நுங்கு விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 30 April 2023 6:45 PM GMT (Updated: 30 April 2023 6:45 PM GMT)

சுட்டெரிக்கும் கோடை வெயிலால் விழுப்புரத்தில் நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

விழுப்புரம்

விழுப்புரம்

கோடை வெயில்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரியையும் கடந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. அதேபோல் விழுப்புரத்திலும் கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. வெயிலின் கொடுமையால் பொதுமக்கள் மிகவும் வாடி, வதங்கி வருகின்றனர். பெரும்பாலான பொதுமக்கள், வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர்.

இந்த வெயிலில் இருந்து தப்பிக்கவும், வெப்பத்தை தணிக்கவும் பொதுமக்கள் குளிர்பான கடைகளை நாடிச்செல்கின்றனர். மேலும் இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம் உள்ளிட்டவற்றையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டு ஓரளவு வெப்பத்தின் தாக்கத்தை தணித்து வருகின்றனர்.

நுங்கு விற்பனை

இதனால் சாலையோரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம் ஆகியவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது நுங்கு விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. தர்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழங்களுக்கு போட்டியாக விழுப்புரம் நகரில் சென்னை- திருச்சி நெடுஞ்சாலை, பழைய பஸ் நிலையம், திரு.வி.க.சாலை, ரங்கநாதன் சாலை, விழுப்புரம்- புதுச்சேரி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரமாக நுங்குகளை குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

தர்பூசணி, வெள்ளரிப்பழம் இவற்றை காட்டிலும் நுங்குகள் விலை மிகவும் குறைவு. 20 ரூபாய்க்கு 5 நுங்குகள் என்ற அடிப்படையில் விற்கப்படுகிறது. விலை குறைவு என்பதால் ஏராளமான பொதுமக்கள், நுங்குகளை ஆர்வமுடன் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்கும் வகையில் தற்போது நுங்கு விற்பனையும் மிகவும் அமோகமாக நடந்து வருகிறது.

இதுபற்றி நுங்கு வியாபாரி ஒருவர் கூறுகையில், தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் நுங்கு விற்பனை சிறப்பாக நடந்து வருகிறது. விலை குறைவு என்பதால் மக்கள், போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச்செல்கின்றனர். நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இன்னும் சில நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்கிறார்கள். இதனால் நுங்கு விற்பனை மேலும் சூடுபிடிக்கும் என்றார்.


Next Story