ஸ்ட்ராபெரி பழங்கள் கொள்முதல் விலை உயர்வு


ஸ்ட்ராபெரி பழங்கள் கொள்முதல் விலை உயர்வு
x
தினத்தந்தி 1 Oct 2023 8:45 PM GMT (Updated: 1 Oct 2023 8:45 PM GMT)

கோத்தகிரி பகுதியில் ஸ்ட்ராபெரி பழங்கள் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நீலகிரி


கோத்தகிரி பகுதியில் ஸ்ட்ராபெரி பழங்கள் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஸ்ட்ராபெரி சாகுபடி

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. கடந்த பல வருடங்களாக பச்சை தேயிலைக்கு கொள்முதல் விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருவதால், விவசாயிகள் மாற்று விவசாயமாக மலைக்காய்கறிகள், கொய் மலர்கள், ஸ்ட்ராபெரி பழங்களை பயிரிட்டு வருகின்றனர். கோத்தகிரி அருகே குருக்குத்தி, கூக்கல்தொரை, தூனேரி பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் ஸ்ட்ராபெரி பயிரிட்டு உள்ளனர். தற்போது ஸ்ட்ராபெரி பழங்கள் கிலோவுக்கு ரூ.300 முதல் ரூ.350 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கொள்முதல் விலை உயர்வு

கொய்மலர் குடில்களில் மண்புழு உரம், ஆடு, மாட்டு சாணம், தசகாவியம், பஞ்சகாவியம் ஆகிய இயற்கை உரங்களை கலந்து மண்ணை பதப்படுத்தி ஸ்ட்ராபெரி நாற்றுகளை பயிரிட்டோம். தொடர்ந்து பராமரித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஸ்ட்ராபெரி பழங்கள் அறுவடைக்கு தயாரானது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறோம்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்ட்ராபெரி பழங்கள் கிலோவுக்கு ரூ.250-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது கிலோ ரூ.350 ஆக கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. மேலும் விளைநிலங்களுக்கே வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து செல்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மராட்டிய மாநிலத்தில் ஒரு நாற்றுக்கு ரூ.5 மானியம் வழங்கப்படுகிறது. எனவே, ஸ்ட்ராபெரி விவசாயத்தை ஊக்குவிக்க தமிழக அரசு கூடுதல் மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story