மோட்டார்சைக்கிள்கள் திருட்டு அதிகரிப்பு


மோட்டார்சைக்கிள்கள் திருட்டு அதிகரிப்பு
x

திருத்தங்கல் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருவதால் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மோட்டார் சைக்கிளை திருத்தங்கல் ஓதுவார் தெருவில் நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது அந்த மோட்டர் சைக்கிளை காணவில்லை.

இதேபோன்று திருத்தங்கல் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த ராமர் என்பவரது மோட்டார் சைக்கிள் கோவில் மடம் அருகே நிறுத்தி இருந்த போது காணவில்லை. திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோட்டை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மோட்டார் சைக்கிள் அவரது கடை அருகே நிறுத்தி இருந்தார் அதுவும் காணவில்லை. இந்த மோட்டார் சைக்கிள் மாயம் தொடர்பாக 3 பேரும் தனித்தனியாக புகார் செய்தனர். இது தொடர்பாக திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் திருத்தங்கல் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியம் கோவில் தெருவை சேர்ந்த அமீன் (வயது 34) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருத்தங்கல் பகுதியில் வாகன திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் போக்குவரத்து போலீசார் அடிக்கடி வாகன தணிக்கை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிற்கும் போக்குவரத்து போலீசார் விதிமீறல்களை சுட்டிக்காட்டி வழக்குப்பதிவு செய்கிறார்கள். இவர்கள் இன்னும் ரோந்து பணியை தீவிரப்படுத்தினால் குற்றச்சம்பவங்களை தடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதில் திருத்தங்கல் போக்குவரத்து போலீசார் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story