கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

கனமழை எதிரொலியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

கனமழை

தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 623 கனஅடியாக இருந்தது.

கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், மார்கண்டேய நதியில் இருந்து வரும் தண்ணீராலும், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 5,800 கனஅடியாக அதிகரித்தது.

மேலும், அணையின் பாதுகாப்பு கருதி, 3 சிறிய மதகுகள், பிரதான 2, 5, 7 மதகுகள் வழியாக வினாடிக்கு 6,100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணை பூங்காவிற்குள் செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும், தொடர்ந்து பெய்யும் மழையை பொறுத்தும் தண்ணீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்பெண்ணை ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது. கால்நடைகளை ஆற்று பகுதிக்கு அழைத்து செல்லக் கூடாது என பொதுப்பணித்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மழை அளவு

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஓசூரில் அதிகபட்சமாக 78 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. போச்சம்பள்ளியில் 48, அஞ்செட்டியில் 45, தேன்கனிக்கோட்டையில் 34, ஊத்தங்கரையில் 32.40, ராயக்கோட்டையில் 27, தளியில் 25, பெனுகொண்டாபுரத்தில் 16.20, கிருஷ்ணகிரியில் 14.40, பாரூரில் 13.80, நெடுங்கல்லில் 8, சூளகிரியில் 6 மில்லி மீட்டர் மழை பதிவானது.


Next Story