முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 July 2023 7:30 PM GMT (Updated: 4 July 2023 7:30 PM GMT)

முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தேனி

முல்லைப்பெரியாறு அணை

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. கேரள மாநிலம் தேக்கடி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணையின் உயரம் 152 அடி ஆகும். இந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இந்த அணையின் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் முதல் போக சாகுபடிக்காக இந்த அணையில் இருந்து ஜூன் மாதம் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டும் இதேபோல் கடந்த மாதம் ஜூன் 1-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த ஆண்டு பருவ மழை மற்றும் கோடைமழை சரிவர பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

நீர்வரத்து அதிகரிப்பு

நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 114.85 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 112 கனஅடியாக இருந்தது. சாரல் மழையால் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 602 கனஅடியாக அதிகரித்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 114.95 அடியாக உயர்ந்தது.

அணையில் இருந்து வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. சாரல் மழை மேலும் தீவிரம் அடைந்தால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் அதிகரிக்கக் கூடும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:-

முல்லைப்பெரியாறு-32.6, தேக்கடி-39.4, கூடலூர்-3.6, உத்தமபாளையம்-2.8, சண்முகா நதி-4.2, போடி-5.4, சோத்துப்பாறை-5, மஞ்சளாறு -14, பெரியகுளம்-7, வீரபாண்டி-5.2, அரண்மனைப்புதூர்- 2.2, ஆண்டிப்பட்டி-3.8.


Related Tags :
Next Story