இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்: மும்பை சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்: மும்பை சென்றடைந்தார்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 17 March 2024 4:15 AM GMT (Updated: 17 March 2024 6:50 AM GMT)

மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மும்பை,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 'பாரத ஒற்றுமை நீதி யாத்திரை' என்ற பெயரில் 2-வது கட்ட யாத்திரையை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் இருந்து மும்பையை நோக்கி தொடங்கினார். யாத்திரையின் நிறைவு நாளான நேற்று தானே நகர் வழியாக யாத்திரை மும்பை வந்தடைந்தது. மும்பையில் வழிநெடுகிலும் மக்கள் அவரை வரவேற்றனர். மும்பை யாத்திரையில் ராகுல்காந்தியுடன் பிரியங்கா காந்தியும் கலந்துகொண்டார்.

இந்த நிலையில், மாலை 5 மணி அளவில் மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் ராகுல்காந்தியின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

குறிப்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்கண்ட் முதல்-அமைச்சர் சம்பாய் சோரன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றடைந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.


Next Story