உலகிற்கே நாகரிகத்தை கற்றுக்கொடுத்த இந்தியா இனியாவது சாவுத்தண்டனையை ஒழிக்க வேண்டும் - ராமதாஸ்


உலகிற்கே நாகரிகத்தை கற்றுக்கொடுத்த இந்தியா இனியாவது சாவுத்தண்டனையை ஒழிக்க வேண்டும் - ராமதாஸ்
x

உலகிற்கே நாகரிகத்தை கற்றுக்கொடுத்த இந்தியா இனியாவது சாவுத்தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

உலகிற்கே நாகரிகத்தை கற்றுக்கொடுத்த இந்தியா சாவுத்தண்டனை ஒழிப்பில் முன்னோடியாக இருந்திருக்க வேண்டும். இனியாவது சாவுத்தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தூக்குத் தண்டனை கொடியதாக இருப்பதால், அதைவிட வலிகுறைந்த, கண்ணியமான முறையில் சாவுத் தண்டனையை நிறைவேற்ற முடியுமா? என்பதை ஆராய குழு அமைக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் பார்வை சரியானதாக இருக்கலாம்; ஆனால், அது தீர்வல்ல!

சாவுத்தண்டனையே மனிதநேயம் அற்றது எனும் போது, அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளில் மனிதநேயமும், கண்ணியமும் எங்கிருந்து வரும்? சாவுத்தண்டனையே காட்டுமிராண்டித்தனம் என்பதால் அதற்கு ஒட்டுமொத்தமாக முடிவு கட்டுவது தான் தீர்வாக இருக்க முடியும்!

குற்றம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையின் நோக்கம் அவர்களைத் திருத்துவது தான். அதற்கு சிறை தண்டனையே சரியானதாக இருக்கும். குற்றமிழைத்த மனிதர்களுக்கு திருந்தி வாழ வாய்ப்பு அளிக்காமல், அவர்களின் வாழ்க்கையையே முடிப்பது இயற்கை நீதியாக இருக்காது!

உலகில் 111 நாடுகளில் சாவுத்தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. 24 நாடுகளில் அது நடைமுறையில் இல்லை. உலகிற்கே நாகரிகத்தை கற்றுக்கொடுத்த இந்தியா சாவுத்தண்டனை ஒழிப்பில் முன்னோடியாக இருந்திருக்க வேண்டும். இனியாவது சாவுத்தண்டனையை ஒழிக்க வேண்டும்!" என்று கூறியுள்ளார்.


Next Story