ரெயில்களில் சக பயணிக்கு தொந்தரவு அளித்தால் நடவடிக்கை - இந்திய ரெயில்வே நிர்வாகம் புதிய உத்தரவு


ரெயில்களில் சக பயணிக்கு தொந்தரவு அளித்தால் நடவடிக்கை - இந்திய ரெயில்வே நிர்வாகம் புதிய உத்தரவு
x

ரெயில்களில் இரவு நேரங்களில் பயணம் செய்யும் போது சக பயணிகளுக்கு தொந்தரவு அளித்தால், ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து புதிய விதிமுறையை வகுத்துள்ளது.

சென்னை:

வெகுதூரங்களுக்கு இரவில் பயணம் செய்ய முதியோர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலும் ரெயில் பயணங்களையே விரும்புகின்றனர். காரணம் அமைதியான பயணம், கழைப்பின்மை, தூக்கம் தடைப்படாதது, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களால் இதற்கு முக்கியத்தும் அளிக்கின்றனர்.

புதிய விதிமுறை

ஆனால் சமீப காலமாக ஒரு சில பயணிகளுக்கு ரெயில் பயணம் என்றால் முகம் சுழிக்கும் வகையில் இருக்கிறது. முன்பு இருந்ததை விட தற்போது நடைமுறைகள் அனைத்தும் மாறி விட்டன.

இதனால், இந்திய ரெயில்வே நிர்வாகம் இரவுப் பயண விதிகளில் மாற்றம் செய்து உள்ளது. குறிப்பாக இரவில் தூங்கும் பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு ரெயில்வே நிர்வாகம் இரவுப் பயண விதிகளில் இந்தி புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.

அதன்படி புதிய விதிகளை அனைத்து பயணிகளும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முழுமையான தகவல்களை ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

சத்தமாக பேச கூடாது

புதிய விதிகளின்படி, இரவு 10 மணிக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு பயணத்தின் போது எந்த ரெயில் பயணிகளும் செல்போனில் சத்தமாகப் பேசவோ, உரத்த குரலில் பாடல்களைக் கேட்கவோ கூடாது. இரவில், இரவு விளக்கு தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும். இதனால் சக பயணிகளின் தூக்கம் கெடாமல் இருக்கும்.

மீறி செயல்பட்டால் பயணிகளிடமிருந்து பெறப்படும் புகார்களின் பேரில், ரெயில்வே நிர்வாகம் அத்தகைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும். பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரெயில்களில் உள்ள சோதனை ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எப்.), மின்சார சாதனங்கள் பராமரிப்பவர்கள் (எலக்ட்ரீஷியன்), உணவு பரிமாறும் பிரிவு ஊழியர்கள் (கேட்டரிங்) மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் இரவில் அமைதியாக வேலை செய்வார்கள்.

குறிப்பாக, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட ஒற்றைப் பெண்களுக்கு ரெயில்வே ஊழியர்கள் உடனடி உதவி வழங்குவார்கள்.

ரெயில்வே ஊழியர்களே பொறுப்பு

புதிய விதிகளின்படி, ரெயிலில் பயணித்தவர்களிடம் இருந்து பெறப்படும் புகார்களுக்கு தீர்வு காணப்படாவிட்டால், ரெயில்வே ஊழியர்களின் பொறுப்புணர்வை சரி செய்யலாம் என்ற விதிமுறையும் உள்ளது.

அனைத்து மண்டலங்களுக்கும் இந்த விதிகளை உடனடியாக அமல்படுத்துவதுடன், வரும் காலங்களில் பயணிகள் பாதிக்கப்பட்டால் ரெயில்வே ஊழியர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பயணிகள் நலன் கருதி, ரெயில்வே நிர்வாகம் அவ்வப்போது மாற்றங்கள் செய்வது வழக்கம். அந்தவகையில் தற்போது பயணிகளின் இரவு தூக்கம் தடைப்படாமல் இருப்பதற்காக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்று ரெயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story