மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து 10,400 கன அடியாக நீடிப்பு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து 10,400 கன அடியாக நீடிப்பு
x

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் தொடர்ந்து 43-வது நாளாக நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.

மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு கடந்த 21-ந்தேதி காலை விநாடிக்கு 10,400 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்தது. 4-வது நாளாக இன்று காலையிலும் அதே அளவு தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே டெல்டா மாவட்ட பாசனத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளன. இதில் அணையை ஒட்டியுள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 10,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாயில் 400 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் தொடர்ந்து 43-வது நாளாக நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. அணை முழுவதும் நிரம்பி உள்ளதால் கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story