'வாட்ஸ் அப்'பில் தகவல் அனுப்பிவிட்டு ஐ.ஐ.டி. மாணவர் தற்கொலை


வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பிவிட்டு ஐ.ஐ.டி. மாணவர் தற்கொலை
x

‘வாட்ஸ் அப்’பில் தகவல் அனுப்பிவிட்டு ஐ.ஐ.டி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் சச்சின்குமார் ஜெயின் (வயது 31), தேவகிஷ் ஜூஸ் (28), தேவராஜ் (28). இவர்கள் 3 பேரும் சென்னை ஐ.ஐ.டி.யில் பி.எச்டி படித்து வருகிறார்கள். இதற்காக இவர்கள் 3 பேரும் கடந்த 3 மாதங்களாக வேளச்சேரி, பிராமின் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்தனர். நேற்று காலை வழக்கம்போல் 3 பேரும் கல்லூரிக்கு சென்றனர். ஆனால் சச்சின்குமார் ஜெயின் மட்டும், காலை 11 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

பின்னர் "என்னை மன்னித்து விடுங்கள், நான் நலமாக இல்லை" என ஆங்கிலத்தில் 'வாட்ஸ் அப்'பில் 'ஸ்டேட்டஸ்' வைத்தார். அதையே தனது நண்பர்களுக்கும் 'வாட்ஸ் அப்'பில் அனுப்பினார்.

இதற்கிடையில் மதியம் 1 மணியளவில் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த தேவகிஷ் ஜூஸ், வீட்டின் அறையில் உள்ள மின்விசிறி கொக்கியில் சச்சின்குமார் ஜெயின் போர்வையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்த மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் சச்சின்குமார் ஜெயினின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story