ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது - சு.வெங்கடேசன் எம்.பி


ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது - சு.வெங்கடேசன் எம்.பி
x

கோப்புப்படம்

தமிழ்நாட்டுக்கு புதிய ரெயில் திட்டங்களை முடிக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது என்று சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.

மதுரை,

தமிழ்நாட்டுக்கு புதிய ரெயில் திட்டங்களை முடிக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களை துவக்கிவைக்கும் விழாவில் பங்கெடுத்து உரையாற்றிய பிரதமர் தமிழகத்தில் ரெயில் வளர்ச்சி திட்டங்களுக்கு தங்கள் ஆட்சியில் அதிக நிதி ஒதுக்கியுள்ளதாக கூறினார். இந்தாண்டு 6000 கோடி ஒதுக்கி உள்ளதாகவும் 2014 க்கு பிறகு அதிக தொகை ஒதுக்கப்பட்டு வருவதாக கூறினார். பிரதமரின் இந்த கூற்றுக்கும், ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையின் பிங்க் புத்தகத்திற்கும் இடையில் நிறைய வேறுபாடு உண்டு.

தமிழகத்தில் கடைசியாக வந்த ராமேஸ்வரம் தனுஷ்கோடி புதிய பாதை திட்டத்தோடு மொத்தம் ஒன்பது திட்டங்கள் புதிய பாதை திட்டங்கள் ஆகும். இந்த ஒன்பது திட்டங்களுக்கு தேவைப்படுகிற நிதி 11,400 கோடியாகும். இந்த திட்டங்கள் 2006-07 முதல் தொடர்ந்து இருந்து வருகின்றன. இவற்றுக்கு 2020 வரை வெறும் 211 கோடி தான் ஒதுக்கப்பட்டது. 2021-22 முதல் சென்ற ஆண்டு வரை ஒவ்வொரு திட்டத்திற்கும் வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கியதை சுட்டிக்காட்டி நான் விமர்சித்து இருக்கிறேன். ரெயில்வே வாரிய தலைவரையும் சந்தித்து இருக்கிறேன். 2023-24 மட்டும் இந்த திட்டங்களுக்கு ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரதமர் துவக்கி வைத்த ராமேஸ்வரம்- தனுஷ்கோடி திட்டத்திற்கு 385 கோடியும் திண்டிவனம் -நகரி திட்டத்திற்கு 200 கோடியும் தவிர மற்ற திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2006 இல் இருந்து 16 ஆண்டுகளில் இவர்கள் ஆட்சிக்கு வந்த ஒன்பது ஆண்டுகளிலும் இதுவரை செலவு செய்யப்பட்ட தொகை 11,400 கோடிக்கு வெறும் 211 கோடி தான். இந்த ஆண்டு ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும் இது யானை பசிக்கு சோளப்பொறி தான். இதே போல இரட்டைப்பாதை திட்டங்களுக்கு 5340 கோடி தேவைப்படுகிறது.

காட்பாடி -விழுப்புரம்; சேலம் -கரூர்- திண்டுக்கல்; ஈரோடு- கரூர் ஆகிய இரட்டை பாதை திட்டங்களுக்கு தேவைப்படுகிற நிதி மட்டும் 3851 கோடி. சென்ற ஆண்டு ஒதுக்கியது ஒவ்வொரு திட்டத்துக்கும் வெறும் ஆயிரம் கோடி இந்த ஆண்டு 3 திட்டத்துக்கும் சேர்த்து வெறும் 60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அகலப்பாதை திட்டத்தின் தொடர்ச்சியாக சின்னசேலம்- கள்ளக்குறிச்சி; காரைக்கால் பேரளம்; தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை ஆகிய திட்டங்கள் போதிய நிதியின்றி தவிக்கின்றன.

மதுரை- மணியாச்சி- தூத்துக்குடி இரட்டை பாதை திட்டம் ஓரளவுக்கு முடியும் நிலையில் இருந்தாலும் வாஞ்சி மணியாச்சி- நாகர்கோவில் திட்டமும் அதே போல கன்னியாகுமரி- நாகர்கோவில்- திருவனந்தபுரம் திட்டமும் சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு அதாவது 21-22 முடியும் என்றார்கள். இன்னமும் அது இழுத்துக் கொண்டுதான் உள்ளது. 2023-24 தெற்கு ரெயில்வேக்கே 8,322 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 6000 கோடி தமிழகத்துக்கு. இந்த ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது.

ஆனால் 2014-15 இல் இருந்து 2022- 23 வரை சராசரியாக ஆண்டுதோறும் 2900 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சி காலத்தின் அதே சராசரி தான் பிஜேபி ஆட்சிக்காலத்திலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு 16 ஆண்டுகளாக முடியாத புதிய ரெயில் திட்டங்களை முடிக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. வடக்கு ரெயில்வேயுடன் ஒப்பிடும் போது தெற்கு ரெயில்வேயின் பல திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை மறைக்க முடியாது. இனியும் பாரபட்சம் கலைந்து தெற்கு ரெயில்வேக்கு தொடர்ந்து போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story