வேட்பாளர்களின் உடற்தகுதி சான்றை சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா? - தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


வேட்பாளர்களின் உடற்தகுதி சான்றை சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா? - தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x

வேட்பாளர்களின் உடல்நிலை குறித்த அறிக்கை என்பது சம்பந்தப்பட்ட நபரின் தனிப்பட்ட அந்தரங்க விஷயம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

சென்னை,

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும்போது அவர்களின் சொத்து விவரம், குற்றவழக்குகள் பற்றிய தகவல்களுடன் 30 நாட்களுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடக் கோரி கடந்த 2016-ம் ஆண்டு பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பையா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வேட்பாளர்களின் உடல்நிலை குறித்த அறிக்கை என்பது சம்பந்தப்பட்ட நபரின் தனிப்பட்ட அந்தரங்க விஷயம் என்பதால் அந்த விவரங்களை கேட்க முடியாது என தெரிவித்தார். மேலும் மத்திய அரசு இது குறித்து சட்டம் இயற்றினால்தான் இதனை செயல்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மக்கள் பிரதிநிதியின் உடல்நிலையை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது என்றும், மருத்துவ காப்பீடு பெறுவதற்கு மருத்துவ பரிசோதனை அறிக்கையை அளிக்கக் கூடிய நிலையில், வேட்பாளர்களுக்கு ஏன் அதை வலியுறுத்தக் கூடாது? என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் வேட்பாளர்களுக்கு இருக்கக் கூடிய நோய்கள் குறித்து தெரிவிக்கும்படி வலியுறுத்த முடியாது என தெரிவித்த நீதிபதிகள், அரசியல் சாசனப் பதவிகளை வகிப்பவர்கள் உடற்தகுதி சான்று சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது என்றும், அந்த அடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உடற்தகுதி சான்றை சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா? என்பது குறித்து விளக்கமளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 13-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.



Next Story