செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி... பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இன்ஸ்பெக்டர்


செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி... பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இன்ஸ்பெக்டர்
x

செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இன்ஸ்பெக்டரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

சென்னை

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணியாற்றும் 8 பெண் போலீசார், தாம்பரம் மாநகர போலீஸ் ஆயுதப்படையில் இருந்து மாற்றுப்பணியாக கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெண் போலீசார், தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜியிடம் ஒரு புகார் அளித்தனர். அதில், கண்ணகிநகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துசாமி, தங்களது செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்திகள், ஆபாச புகைப்படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவரை கண்டித்தபோது தங்களை பழிவாங்கும் நோக்கத்துடன் கடுமையான பணிகளில் ஈடுபடுத்தியதாகவும், அதன் பின்னரும் பாலியல் தொல்லை கொடுப்பதை விடவில்லை எனவும் தெரிவித்திருந்தனர்.

அந்த புகார் மீது விசாரணை செய்யும்படி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அமல்ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் உயர் அதிகாரிகள், பெண் போலீசாரின் புகார் குறித்து விசாரணை செய்தனர். பின்னர் இது தொடர்பான அறிக்கையை போலீஸ் கமிஷனரிடம் சமர்பித்தனர்.

அந்த அறிக்கையின் அடிப்படையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேற்று உத்தரவிட்டார்.

அதேவேளையில் கண்ணகிநகர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் இருந்து 8 பெண் போலீசாரும் விடுவிக்கப்பட்டு, வேறு பணிக்கு மாற்றப்பட்டனர்.


Next Story