இன்ஸ்டாகிராம் பழக்கம்: நண்பர் வீட்டில் சிறை வைத்து பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர்


இன்ஸ்டாகிராம் பழக்கம்: நண்பர் வீட்டில் சிறை வைத்து பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர்
x

நாகர்கோவில் அருகே, திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் மேல கலுங்கடியை சேர்ந்தவர் வசந்தராஜ் (வயது 23), தொழிலாளி. இவருக்கும், நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது.

ஒரு கட்டத்தில் மாணவியை வசந்தராஜ், தனது நண்பரின் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். இதை நம்பி மாணவியும் அங்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. வசந்தராஜ் மட்டுமே இருந்தார். அந்த சமயத்தில் மாணவியிடம் அவர் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார். உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும், விரைவில் திருமணம் செய்து கொள்கிறேன் என கூறியபடி அவரை தன்வசப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் 3 நாட்களும் அங்கேயே சிறை வைத்து மாணவியின் வாழ்க்கையை சீரழித்தார்.

மேலும் இந்த சம்பவத்தை வெளியே கூறக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் வீடு திரும்பிய மாணவி, நடந்த விவரத்தை தாயாரிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வசந்தராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

கைதான வசந்தராஜ் மீது ஏற்கனவே ஒரு போக்சோ வழக்கு கடந்த 2020-ம் ஆண்டு பதிவாகி உள்ளது. இதுதவிர வடசேரி போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சிறுமியை சீரழித்தவர்

4 வருடங்களுக்கு முன்பு ஏற்கனவே ஒரு சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த நிலையில் வசந்தராஜ் தற்போது மற்றொரு மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதேபோன்று அவரால் ஏமாற்றப்பட்ட இளம்வயது பெண்கள் யாரேனும் உள்ளார்களா? என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே சமயத்தில் வசந்தராஜால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் துணிச்சலாக புகார் கொடுக்கலாம். அந்த பெண்ணின் முகவரி எதுவும் வெளியிடப்படாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் பிடித்ததும் நாடகம்

கைதான வசந்தராஜை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது போலீசார் தன்னை தாக்கியதாக வசந்தராஜ் கூறியுள்ளார்.

ஆனால் டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது அவரது உடலில் காயம் எதுவும் இல்லை. இதன்மூலம் அவர் நாடகமாடியது தெரியவந்தது. வசந்தராஜ் இதற்கு முன்பு போக்சோ வழக்கிலும், திருட்டு வழக்கிலும் போலீசில் சிக்கியபோதும் இதுபோல போலீசார் தன்னை தாக்குவதாக கூறி நடகமாடியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story