நதிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் அடையாறு ஆற்றங்கரையோரம் மரக்கன்று நடும் பணிகள் தீவிரம் - மாநகராட்சி தகவல்


நதிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் அடையாறு ஆற்றங்கரையோரம் மரக்கன்று நடும் பணிகள் தீவிரம் - மாநகராட்சி தகவல்
x

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை

சென்னை திரு.வி.க.நகர் பாலம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரை அடையாறு ஆற்றங்கரையோரங்களில், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் மரக்கன்று நடுதல், தடுப்பு வேலிகள் அமைத்தல் போன்ற மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 60 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு, இதுவரை 36 ஆயிரத்து 820 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இந்த மரக்கன்றுகளை பராமரிக்க சொட்டுநீர் பாசன வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூ.2 கோடியே 58 லட்சம் செலவில் 157-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் செல்லும் அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்றி, அந்த இடங்களில் பாரம்பரிய மரக்கன்றுகள், மூலிகை செடிகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேபோல் மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுதளம் அருகே உள்ள மேம்பாலம் முதல் நந்தம்பாக்கம் பாலம் வரை இடதுபுறத்தில் 3.9 கி.மீட்டர் நீளத்தில் ரூ.1.41 கோடி செலவில் 7 ஆயிரத்து 536 மரக்கன்றுகளும், வலது புறத்தில் 4 கி.மீட்டர் நீளத்தில் ரூ.1.17 கோடி செலவில் 5 ஆயிரத்து 920 மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story