கிரெடிட் கார்டுக்கு வேண்டுமென்றே காலதாமத கட்டணம் வசூலிப்பு; பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு


கிரெடிட் கார்டுக்கு வேண்டுமென்றே காலதாமத கட்டணம் வசூலிப்பு; பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு
x

சென்னை குரோம்பேட்டையில் கிரெடிட் கார்டுக்கு வேண்டுமென்றே காலதாமதமாக கட்டணம் வசூலித்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு தனியார் வங்கிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த அசோக்குமார், சரக்குகளை கையாளும் போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் வங்கியின் 'கிரெடிட் கார்டை' பயன்படுத்தி வந்துள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கியதற்கு செலுத்தவேண்டிய தொகைக்காக குறிப்பிட்ட நாளுக்குள் காசோலை கொடுத்துள்ளார். அவரது வங்கிக் கணக்கில் போதிய பணம் இருந்தபோதிலும், பணம் இருப்பு இல்லாமல் காசோலை திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக கூறி வங்கி நிர்வாகம் காலதாமத கட்டணமாக ரூ.300 வசூலித்துள்ளது.

இதுகுறித்து அசோக்குமார் முறையான ஆவணங்களுடன் வங்கி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். அதையடுத்து அசோக்குமார் சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஆணைய தலைவர் ஜிஜா, உறுப்பினர்கள் சிவக்குமார், நந்தகோபாலன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல் ஜென்கின்ஸ் வில்லியம்ஸ் ஆஜராகி வாதாடினார்.

முடிவில், 'மனுதாரரின் வங்கிக் கணக்கில் போதிய பணம் இருந்தபோதிலும் காசோலையை திருப்பி அனுப்பி காலதாமத கட்டணத்தை வங்கி நிர்வாகம் வசூலித்தது சேவைக் குறைபாடு ஆகும். எனவே அதற்காக வங்கி நிர்வாகம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரமும், வழக்குச் செலவுக்காக ரூ.3 ஆயிரமும் வழங்க வேண்டும். காலதாமத கட்டணம் எனக்கூறி வசூலித்த 300 ரூபாயையும் திரும்ப வழங்க வேண்டும்' என்று கோர்ட்டு உத்தரவிட்டது.


Next Story