கோவையில் சர்வதேச அளவிலான பூனைகள் மற்றும் நாய்கள் கண்காட்சி


கோவையில் சர்வதேச அளவிலான பூனைகள் மற்றும் நாய்கள் கண்காட்சி
x
தினத்தந்தி 5 Jun 2022 7:20 AM GMT (Updated: 5 Jun 2022 7:26 AM GMT)

கோவையில் சர்வதேச அளவிலான பூனைகள் மற்றும் நாய்கள் கண்காட்சி இன்று காலையில் தொடங்கி நடந்து வருகிறது.

கோவை:

கோவை மாவட்டம் ஆனைமலை கேனல் கிளப் சார்பில் அனைத்திந்திய நாய்கள் கண்காட்சி மற்றும் கோயம்புத்தூர் கேட்டெரி சங்கம் சார்பில் சர்வதேச பூனைகள் கண்காட்சி கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.

நாய்களுக்கான கண்காட்சியில் ராட்வீலர், பெல்ஜியன் ஷெப்பர்ட், பூடில், கிரேட் டேன், சிவாவா உள்ளிட்ட பல்வேறு இன நாய்களும், ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை போன்ற இந்திய நாய் இனங்களும் பங்கேற்றன. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாய் இனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழ்நாடு காவல்துறையின் மோப்ப நாய்கள் பங்கேற்றது நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருந்தது.




இந்த ஆண்டு கோயம்புத்தூரில் இருந்து வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பூனை கண்காட்சியில் பெர்சியன், பெங்கால், ஹிமாலயன், தேசி, சியாமிஸ், மீன் கூன் பூனைகள் போன்ற 150 பூனைகள், இறக்குமதி செய்யப்பட்ட ஏராளமான இனங்களுடன் கண்காட்சியில் பங்கேற்றன.




பஞ்சாப்பைச் சேர்ந்த நடுவர்கள் கோமல் தனோவா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த ஹரிஷ் படேல் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் பின்பற்றப்படும் இனங்களின் தரத்தின் அடிப்படையில் நாய்களை மதிப்பிட்டனர். தொடர்ந்து வெற்றி பெற்ற நாய்கள் மற்றும் பூனைகளுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

பூனை கண்காட்சியில் இடம்பெற்ற சில பூனைகள் சிறுத்தை புலி குட்டியை போன்று தோற்றம் இருந்தது. கண்காட்சிக்கு வந்திருந்த சில நாய்கள் தரையில் படுத்து ஓய்வெடுத்தன. கண்காட்சிக்கு வந்திருந்த பொதுமக்கள் வித்தியாசமான தோற்றங்களில் இருந்த நாய்களை ஆர்வத்துடன் பார்த்தனர். அத்துடன் அந்த நாய்களை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

செல்ல பிராணிகள் மீது அதிக அளவு ஈடுபாடும் அன்பும் உடைய பலர் மிகுந்த நேரம் இந்த கண்காட்சிகளில் இருந்து அந்த நாய்களையும் பூனைகளையும் ரசித்துக் கொண்டிருந்தனர்.


Next Story