தாறுமாறாக எகிறிய தக்காளி; தவிக்கும் இல்லத்தரசிகள்


தாறுமாறாக எகிறிய தக்காளி; தவிக்கும் இல்லத்தரசிகள்
x
தினத்தந்தி 2 July 2023 7:58 PM GMT (Updated: 3 July 2023 10:44 AM GMT)

தஞ்சையில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதர காய்கறிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விளைச்சல் இல்லாததால் தக்காளி வரத்து பாதிக்கும் கீழே குறைந்தது.

தஞ்சாவூர்

தஞ்சை,

தஞ்சையில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதர காய்கறிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விளைச்சல் இல்லாததால் தக்காளி வரத்து பாதிக்கும் கீழே குறைந்தது.

காமராஜர் மார்க்கெட்

தஞ்சை அரண்மனை வளாகத்தின் அருகே காமராஜர் மார்க்கெட் உள்ளது. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதேபோல் தஞ்சையில் இருந்தும் வெளியூர்களுக்கு காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

ஓசூர், தளிக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் தக்காளி தஞ்சைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தினமும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பெட்டிகளில் (ஒரு பெட்டியில் 25 கிலோ தக்காளி இருக்கும்) தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் வரத்து குறைந்த காரணத்தால் கடந்த சில நாட்களாக தஞ்சையில் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. அதிலும் தற்போது தமிழகத்தில் தக்காளி விளைச்சல் இல்லை.

தக்காளி கிலோ ரூ.110

இதனால் தஞ்சைக்கு ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தான் தக்காளி விற்பனைக்கு வருகிறது. அதிலும் குறிப்பாக 1,200 முதல் 1500 பெட்டிகளே விற்பனைக்கு வருகின்றன. தேவை அதிகமாக உள்ள நிலையில் வரத்து குறைவாக இருப்பதால் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே செல்கிறது. காமராஜர் மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சமையலில் தக்காளி முக்கிய இடம் வகிப்பதால் எப்போதுமே மக்கள் கிலோ கணக்கில் தக்காளியை வாங்கி செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை உயர்ந்து வருவதால் ¼ கிலோ, ½ கிலோ என்ற அளவில் வாங்கி சென்றனர்.

ஆர்வம் காட்டவில்லை

நேற்று ஒரு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் தக்காளி வியாபாரம் மந்தமாக நடைபெற்றது. தக்காளியை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதேபோல் உணவகங்களுக்கு காய்கறி வாங்குபவர்களும் தக்காளியை குறைந்த அளவே வாங்கி சென்றனர். இது மட்டும் அல்லாமல் இதர காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. இதனால் காய்கறிகளை அள்ளிச்செல்லலாம் என்று வந்த பொதுமக்கள் விலையை கேட்டு கிள்ளிக்கொண்டு சென்றதை காண முடிந்தது.


Next Story