பத்திரப்பதிவுத்துறையில் சட்டமீறல்கள் கொடிகட்டிப் பறக்கின்றன - மக்கள் நீதி மய்யம்


பத்திரப்பதிவுத்துறையில் சட்டமீறல்கள் கொடிகட்டிப் பறக்கின்றன - மக்கள் நீதி மய்யம்
x

பத்திரப்பதிவுத்துறையில் சட்டமீறல்கள் கொடிகட்டிப் பறக்கின்றன என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், நெல்வாய் கிராமங்களில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பை பலமடங்கு ஏற்றி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் பத்திரப்பதிவுத்துறையின் நம்பகத்தன்மையைக் குலைப்பதாக உள்ளது.

தனியார் நிறுவனத்திடமுள்ள 73 ஏக்கர் நிலத்தின் சிறுபகுதியை (117.5 செண்ட்) கூடுதல் விலைக்குப் பதிவு செய்வதன் மூலம், புதிய விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படும். சமயத்தில் எஞ்சியுள்ள பெரும்பாலான நிலத்திற்குக் கூடுதல் இழப்பீடு பெறுவதற்காகவே இந்த முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

சர்வே எண்கள் குறிப்பிடாமல் பதிவுசெய்வது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களைக் குறிப்பிட்டு இந்த நிலத்தைப் பதிவுசெய்ய இயலாது என்று மாவட்டப் பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தபோதும் பத்திரப்பதிவுத்துறை கூடுதல் தலைவர், நிலத்தைப் பதிவுசெய்ய உத்தரவிட்டுள்ளார். உத்தரவிட்ட இந்த உயரதிகாரி மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளன என்பதும் அவர்மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் "சட்டத்தின் ஆட்சி" நடக்கிறது என்று தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார். ஆனால், பத்திரப்பதிவுத்துறையில் சட்டமீறல்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. பத்திரப்பதிவுத்துறையின் அமைச்சர் பி.மூர்த்தி, தலைவர் ஆகியோர் இதுபோன்ற முறைகேடுகள் நிகழாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இலஞ்சஒழிப்புத்துறையானது நடைபெற்ற சட்டமீறலை விரைந்து விசாரித்து முறைகேட்டில் தொடர்புடையோர் அனைவர் மீதும் வழக்குப்பதிந்து சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story