சிவகங்கை, சிங்கம்புணரி தாலுகாவில் 6,039 ஏக்கர் பாசன வசதி பெறும்


சிவகங்கை, சிங்கம்புணரி தாலுகாவில் 6,039 ஏக்கர் பாசன வசதி பெறும்
x

பெரியாறு வைகை தண்ணீர் மூலம் சிவகங்கை மற்றும் சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள 6,039 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்று கலெக்டர் கூறினார்.

சிவகங்கை

பெரியாறு வைகை தண்ணீர் மூலம் சிவகங்கை மற்றும் சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள 6,039 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்று கலெக்டர் கூறினார்.

வைகை தண்ணீர் திறப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசன பகுதியில் உள்ள ஒரு போக பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்தடைந்ததையொட்டி, கலெக்டர் மதுசூதன் ரெட்டி, கள்ளிராதினிப்பட்டி, கட்டாணிப்பட்டி ஆகிய பகுதிகளில் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, கடந்த 7-ந் தேதி சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஒரு போக பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், தண்ணீரை திறந்து விட்டார்.

120 நாட்களுக்கு

2022-2023-ம் ஆண்டிற்கான வைகை பாசனத்திற்காக, பெரியாறு பாசன பகுதியில் உள்ள ஒருபோக பாசன பரப்பாகிய 85,563 ஏக்கர் நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன பரப்பாகிய 19,439 ஏக்கா் நிலங்களுக்கும் என மொத்தம் 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 1,130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 8,461 மி.க.அடி தண்ணீரை வைகை அணையிலிருந்து திறந்து விட அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, தண்ணீர் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்தடைந்துள்ளது. மாவட்டத்திலுள்ள கண்மாய்களுக்கு கட்டாணிப்பட்டி கால்வாய் 1 மற்றும் 2 மற்றும் 48-வது மடைகால்வாய் ஆகிய கால்வாய்கள் திறக்கப்பட்டு முருகினி, புதுக்கண்மாய், பெரியகோட்டை மற்றும் சின்னகுண்ணங்குடி ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மதுரையில் உள்ள குறிச்சி கண்மாய் பெருகி சீல்டு கால்வாய் மூலம் ஆதினி கண்மாய்க்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

6,039 ஏக்கர் நிலம்

இதன்மூலம் மாவட்டத்தில் 129 கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு, சிவகங்கை மற்றும் சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள 6,039 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை செயற்பொறியாளர் பவளக்கண்ணன், உதவி செயற்பொறியாளர் தாசியூஸ், உதவிப்பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Next Story