'மாரிமுத்து சார் இப்போது இல்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது'-நடிகர் சிலம்பரசன் இரங்கல்


மாரிமுத்து சார் இப்போது இல்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது-நடிகர் சிலம்பரசன் இரங்கல்
x
தினத்தந்தி 8 Sep 2023 11:36 AM GMT (Updated: 8 Sep 2023 12:06 PM GMT)

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மறைவுக்கு நடிகர் சிலம்பரசன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. டப்பிங் முடித்து வீட்டிற்கு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது. நடிகர் மாரிமுத்துவின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை, அவரது சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல சின்னத்திரை தொடரான 'எதிர்நீச்சல்' தொடரில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மாரிமுத்து பிரபலமானார். அதுமட்டுமின்றி தமிழில் பரியேறும் பெருமாள், கார்பன், எமன், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த 'ஜெயிலர்' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். நடிகராக மட்டுமின்றி கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார்.

அவரது திடீர் மரணம் திரைத்துறையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மறைவுக்கு நடிகர் சிலம்பரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'மாரிமுத்து சார் இப்போது இல்லை என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமாக உள்ளது. நாங்கள் இருவரும் ஒன்றாக வேலை செய்த காலங்களை நினைவு கூர்கிறேன். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்'என்று பதிவிட்டுள்ளார்.


Next Story