ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டம்


ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

கலெக்டர் அலுவலகம் முன்பு

பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி-முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரி அனந்தன், மாவட்ட செயலாளர் மரியதாஸ், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரபாகரன், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் அருள்ஜோதி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினா். போராட்டத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

பழைய ஓய்வூதிய திட்டம்

உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை தொகை, சரண்டர் விடுப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மாலை வரை நடந்தது

காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நடந்தது. தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசு ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்து கோரிக்கைகள் குறித்து பேசினார்.

1 More update

Next Story