மூதாட்டியை படுகொலை செய்து நகை கொள்ளை - 2 பேர் கைது


மூதாட்டியை படுகொலை செய்து நகை கொள்ளை - 2 பேர் கைது
x

மதுகுடிக்க பணம் தேவைப்பட்டதால் மூதாட்டியை படுகொலை செய்து நகைகளை 2 பேர் கொள்ளையடித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் எரும்பி கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 85). இவரது கணவர் 15 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். வள்ளியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். அவரது மகன் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். அவர் குடும்பத்துடன் ஆவடியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் வள்ளியம்மாள் நேற்று காலை வெகு நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. எனவே சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் மூதாட்டியின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வள்ளியம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமமக்கள் இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று வள்ளியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகள் மூதாட்டி மற்றும் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி சென்றிருந்தனர். இந்த நிலையில் கொலை நடந்த இடத்தை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் நேரில் சென்று பார்வையிட்டு கொலையாளிகளை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து டி.எஸ்.பி. (பொறுப்பு) கந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவா, ரவிச்சந்திரன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சந்தேகத்தின் பேரில் அதே பகுதியில் சித்தூர் ரோட்டில் வசிக்கும் சதீஷ் (21) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மூதாட்டி வள்ளியமாளை கொலை செய்தது தானும் தன்னுடன் அதே கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் (28) என்பதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து வினோத்குமாரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்தனர். அதில் வினோத் குமார் அந்த பகுதியில் உள்ள சலூன் கடையில் வேலை செய்து வரும் நிலையில் சதீஷ் சோளிங்கரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து தற்போது அந்த கம்பெனி விட்டு நின்று விட்டார். நண்பர்களான இவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தாங்கள் குடிப்பதற்கு தேவையான பணத்தை சம்பாதிக்க திருட்டில் ஈடுபட முடிவெடுத்தனர்.

சதீஷ் தனது வீட்டிற்கு அருகே 3-வது வீட்டில் வசிக்கும் வள்ளியம்மாள் தனியாக வசிக்கிறார். அவர் கழுத்தில் எப்பொழுதும் நிறைய நகைகளை அணிந்து இருப்பார். எனவே அவரை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடிக்கலாம் என வினோத்குமாருடன் சேர்ந்து திட்டம் போட்டார்.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் வள்ளியம்மாள் வீட்டு அருகே காத்திருந்தனர். அப்போது இரவில் வள்ளியம்மாள் வெளியே வந்தபோது அவரை செங்கல்லால் தலையில் தாக்கி கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொன்று அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றிக்கொண்டு வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி விட்டு தப்பி ஓடியதாக தெரிவித்தனர். போலீசார் அவர்கள் கொள்ளை அடித்த நகைகளை வாங்கி பரிசோதனை செய்தனர். அதில் அந்த நகைகள் அனைத்தும் பித்தளை நகைகள் என்று தெரியவந்தது.

சில மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட மூதாட்டி வள்ளியம்மாள் வீட்டின் முன்பு அமர்ந்து இருந்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டு தங்க சங்கிலியை மீட்டு மூதாட்டியிடம் போலீசார் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நடந்த பிறகு வள்ளியம்மாள் தான் அணிந்திருந்த தங்க நகைகள் அனைத்தையும் ஆவடியில் உள்ள தனது மகனிடமும் கொடுத்துவிட்டு கவரிங் நகைகளை அணிந்துள்ளார். இது தெரியாமல் கொலையாளிகள் 2 பேரும் மூதாட்டி வள்ளியம்மாளை கொடூரமாக கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story